டிச.7ஆம் தேதி பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி முக்கிய முடிவு?
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 7ஆம் தேதி அன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னியர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் & மாவட்ட தலைவர்கள் கூட்டம் வரும் திசம்பர் 7&ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிடி தியாகராயர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையேற்பார். பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்வர்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பொருள்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில் பா.ம.கவின் அனைத்து மாவட்ட செயலர்கள் & மாவட்ட தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு திரும்புகிறது என்ற முழக்கத்துடன் பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் கிராமங்கள் தோறும் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெறவிருப்பதால் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. அதேபோல் 5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றியும் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications