கூட்டணியில் இருந்து கொண்டே.. மாஜி ஊடக பிரிவு தலைவரை தட்டி தூக்கிய பாஜக.. அதிர்ச்சியில் பாமக
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று பாஜகவில் சேர்ந்தார். அதுதான் பரவாயில்லை, எதிர்க்கட்சியிலிருந்து தலைவர்களை இழுப்பது வாடிக்கைத்தானே என்று நினைத்த அரசியல் பார்வையாளர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்தது பாஜக.
ஆம்.. கூட்டணியில் கூடவே கை போட்டுக் கொண்டுள்ள பாமகவைச் சேர்ந்த முன்னாள் முக்கிய பிரமுகரையும் தங்கள் பக்கம் இழுத்துள்ளது பாஜக.
பாமகவின் மாஜி தமிழ் ஊடக பிரிவு தலைவரை தட்டித் தூக்கியுள்ளது பாஜக.
அருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்!
பாஜகவில் பாமக முன்னாள் நிர்வாகி
பாமகவின் ஊடக பிரிவு தலைவராக இருந்தவர் சோழன் குமார் வாண்டையார். இன்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கனவே திமுக முன்னாள் எம்.பி கே.பி ராமலிங்கம் சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர்
இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார். ஒரு கட்சியின் பொதுச் செயலாளரையே தட்டித் தூக்கிவிட்டது பாஜக என்று பரபரப்பு கிளம்பிய நேரத்தில்தான் சோழன் குமார் வாண்டையாரையும் கட்சியில் சேர்த்துள்ளது.
பாமக கட்சி பிரமுகர்
பாமக தமிழ் ஊடக பிரிவின் தலைவராக இருந்து பின்னர் அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்தான், சோழன் குமார் வாண்டையார். இருப்பினும் கூட்டணி கட்சியில் இருந்து நீக்கப்ப்டடவரை, பாஜக ஏன் சேர்த்தது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அருணாச்சல பிரதேசம் பாணி
இது கூட்டணி தர்மத்திற்கு ஏற்புடயதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இப்படித்தான் பீகாரில் நிதிஷ் குமார் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டுள்ள பாஜக அருணாச்சல பிரதேசத்தில், அதே நிதிஷ் குமார் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களை தங்கள் கட்சியில் சேர்த்துள்ளது. அருணாச்சல பிரதேசம், பீகாரில் செய்யும் அதே அரசியல் பாணியை தமிழகத்திலும் பாஜக கையில் எடுத்துள்ளதா என்ற கேள்வியை சோழன் குமாரின் இணைப்பு எழுப்புகிறது. இதனால் பாஜக கூட்டணி கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.