பாமக நிறுவனர் ராமதாஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு - தைலாபுரம் நிகழ்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கி உள்ளது. கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் நடைபெற்று வந்த பயிலரங்கங்கள், ஆய்வுக் கூட்டங்கள், பயிற்சி வகுப்புகளில் ராமதாஸ் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை ட்விட்டரில் அறிவித்த ராமதாஸ் அனைத்து நிகழ்வுகளையும் ஒத்திவைப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதில், "கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பதால், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பயிலரங்கில் நடத்தப்பட்டு வந்த ஆய்வுக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. அவற்றுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்." என்று அறிவித்து உள்ளார்.
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட அவர் "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்." என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications