Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'நோக்கம் நல்லது தான், ஆனால்..' போலி தடுப்பூசி பதிவு விவகாரத்தில் தமிழக அரசை சாடும் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு வேக்சின் பணிகளில் சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து களப் பணியாளர்களுக்குத் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவதாகச் சாடியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், போலி தடுப்பூசி பதிவுகள் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாரம்தோறும் சிறப்பு மெகா வேக்சின் முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்கள். உயிரிழந்தோர் ஆகியோருக்கு எல்லாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன

போலி சான்றிதழ்கள்

போலி சான்றிதழ்கள்

இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கும், பல மாதங்களுக்கு முன்பே உயிரிழந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாகப் போலியாக பதிவுகள் செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய போலி பதிவுகள் இனி நடக்காமல் தடுக்க வேண்டும் என்று பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ள போதிலும், இதுவரை செய்யப்பட்டுள்ள போலி பதிவுகள் நீக்கப்பட வேண்டியதும், போலி பதிவுகளின் எண்ணிக்கை கண்டறியப்பட வேண்டியதும் அவசியமாகும். சென்னையில் பல மாதங்களுக்கு முன்பே உயிரிழந்த மூத்த குடிமகன் ஒருவர் பயன்படுத்திய செல்பேசிக்கு அக்டோபர் மாதத்தில் இரு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அதில் அந்த செல்பேசியை பயன்படுத்திவரும் இருவருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் செல்பேசி எண்ணைப் பயன்படுத்தி மூவருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக போலி பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகப் பதிவு செய்துள்ள பலருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

சுகாதாரத் துறை இலக்குகள்

சுகாதாரத் துறை இலக்குகள்

கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பொதுச் சுகாதாரத்துறை ஊழியர்களுக்குச் சாத்தியமில்லாத இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதை எட்ட முடியாது என்பதால் தான் சுகாதாரப் பணியாளர்கள் போலி பதிவுகளைச் செய்தார்கள் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாகச் செய்திகள் வந்துள்ளன. போலி பதிவுகளுக்கான காரணங்களையும், பின்னணியையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானவையாக இருக்கும்; பல நேரங்களில் அந்த பாதிப்பைச் சரி செய்ய முடியாது. இதை உணராமல் சுகாதாரத்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் செயல்படக்கூடாது.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

உயிரிழந்தவர்களின் செல்பேசி எண்ணைப் பயன்படுத்தி போலி பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அது குற்றம் தான் என்றாலும், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. அதே நேரத்தில், ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் செல்பேசி எண்ணைப் பயன்படுத்தி போலி பதிவுகள் செய்யப்பட்டிருந்தால், கடைசியாக அந்த எண்ணைப் பயன்படுத்தி யாருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அதற்கான தடுப்பூசி சான்றிதழை மட்டும் தான் பதிவிறக்கம் செய்ய முடியும். அதனால், உண்மையாகவே அந்த செல்பேசி எண்ணை வைத்திருப்பவர் அவருக்கான தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்க முடியாது.

தடுப்பூசி போட முடியாத நிலை

தடுப்பூசி போட முடியாத நிலை

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளவர்களின் செல்பேசி எண்ணைப் பயன்படுத்தியும் போலி பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர் போட்டுக்கொண்டதாகப் பதிவு செய்யப்பட்டால், அவரால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது. இது மிகவும் கொடுமையானது. ஒருவர் செய்யாத தவறுக்காக அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பை பறிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

சாத்தியமற்ற இலக்குகள்

சாத்தியமற்ற இலக்குகள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அனைவருக்கும் விரைவாகத் தடுப்பூசி போட வேண்டும் என்ற அரசின் நோக்கம் சரியானது தான். ஆனால், அதற்காகச் சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து களப் பணியாளர்களுக்குத் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவது சரியல்ல. அதுமட்டுமின்றி, இலக்கை எட்டாத சுகாதாரப் பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளும் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் தான் சுகாதாரப் பணியாளர்கள் இத்தகைய குறுக்கு வழிகளைப் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்குச் சாத்தியமற்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது எவ்வளவு தவறோ, அதை விட தவறு அதைக் காரணம் காட்டி போலி பதிவுகள் செய்யப்பட்டது ஆகும். கொரோனா தடுப்பு தொடர்பான முக்கியமான விஷயத்தில் இது போன்ற குற்றங்களை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விசாரணை தேவை

விசாரணை தேவை

தமிழ்நாட்டில் போலி தடுப்பூசிகள் போடப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தெந்த செல்பேசி எண்களைப் பயன்படுத்தி போலி பதிவுகள் செய்யப்பட்டனவோ, அவை அனைத்தையும் நீக்கி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து விரிவான வெள்ளை அறிக்கையையும் தமிழக மருத்துவத்துறை வெளியிட வேண்டும். வருங்காலத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்குச் சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயிப்பதை அரசு கைவிட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+