வரதட்சணையை புனிதப்படுத்தும் வகையில் பாடநூல்கள்! பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு!
சென்னை: செவிலியர் படிப்புக்கான பாட நூல்களில் வரதட்சணையை புனிதப்படுத்தியிருப்பது பிற்போக்குத்தனமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செவிலியர் படிப்புக்கும் வரதட்சணைக்கும் என்ன தொடர்பு என்றும் அவர் மத்திய அரசை வினவியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

செவிலியர் படிப்பு
செவிலியர் படிப்புக்கான Textbook of Sociology for Nurses என்ற நூலில் வரதட்சணையை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துகள் இடம் பெற்றுள்ளன. TK Indrani என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள் & பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது.

வரதட்சணை பிற்போக்கானது
வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் வீட்டை கட்டமைக்க உதவுகின்றன; மகனுக்கு கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு மகளை திருமணம் செய்து கொடுக்க முடியும்; வரதட்சணை தான் மகளிர் கல்வியை ஊக்குவிக்கிறது என்பன போன்ற அந்த நூலில் உள்ள கருத்துகள் பிற்போக்கானவை.

என்ன தொடர்பு?
அசிங்கமான பெண்களை கவர்ச்சிகரமான வரதட்சணை மூலம் அழகான பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களை பண்டமாக பார்க்கும் இழி செயலாகும். இந்தக் கருத்துக்கும் செவிலியர் கல்விக்கும் என்ன தொடர்பு? எனத் தெரியவில்லை.

கடும் கண்டனம்
வரதட்சணை ஆதரவு பிரச்சார அமைப்புகளில் கூட வைக்கத் தகுதியற்ற இந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடமாக வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications