நான் நினைத்திருந்தால் ஜனாதிபதி ஆகியிருப்பேன்! ஆனால் ஏன் ஆகவில்லை தெரியுமா? ராமதாஸ் தந்த விளக்கம்
சென்னை: பாமக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், தான் நினைத்திருந்தால் ஜனாதிபதியாகக் கூட ஆகியிருக்க முடியும் எனத் தெரிவித்தார். இருப்பினும், எந்தவொரு பதவியையும் ஏற்க மாட்டேன் எனச் சத்தியம் செய்துள்ளதால் மக்களின் நலனுக்காக உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தனக்கு எப்போதும் பதவி ஆசை இருந்ததே இல்லை என்றும் அவர் கூறினார்.
பாமகவில் கடந்த சில காலமாகவே தந்தை- மகன் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இரு தரப்புமே தாங்கள் தான் கட்சித் தலைவர் எனச் சொல்லி வருகிறது. இதனால் அங்கு பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ச்சியாகக் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

ராமதாஸ் பேச்சு
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், தான் நினைத்திருந்தால் ஜனாதிபதியாகக் கூட ஆகியிருக்க முடியும் எனக் குறிப்பிட்டார். ஆனாலும், மக்கள் நலனே தனக்கு முக்கியம் என்றும் இதன் காரணமாகவே எந்தவொரு பதவியையும் ஏற்காமல் உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆகியிருப்பேன்
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "நான் எந்தவொரு பதவியையும் வகித்ததில்லை.. எந்த பதவியையும் விரும்பாதவன் நான். ஜி.கே.மணி சொன்னது போல நான் நினைத்திருந்தால் ஜனாதிபதியாகக் கூட ஆகியிருக்கலாம்.. இப்போது துணை ஜனாதிபதி கூட தமிழர் தானே.. நான் நினைத்திருந்தால் ஜனாதிபதியாகக் கூட ஆகியிருக்கலாம்.. அனைத்து பிரதமர்களும் எனது நண்பர்கள் தான். இப்போதும் கூட பிரதமர் மோடி வந்தால் என்னைக் கட்டித்தழுவிக் கொள்வார்.
ஆனால், எனக்கு எந்த பதவியிலும் ஆசை இல்லை. எனது மக்கள் நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இதன் காரணமாகவே நான் எம்எல்ஏ கூட ஆகவில்லை. நமது எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்சனை குறித்து சட்டசபையில் பேசச் சொல்வேன். இதுபோல நாங்கள் ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறேன். ஆனால், எனக்குப் பதவி மீது ஆசையில்லை. வாழ்நாள் முழுக்க எந்தவொரு பதவிக்கும் போக மாட்டேன் எனச் சத்தியம் செய்துள்ளேன். உங்களைப் பெரிய பதவியில் உட்கார வைத்து அழகு பார்ப்பதே எனது விருப்பம்.
வாக்கிற்குப் பணம்
பெண்கள் நினைத்தால் ஆட்சிப் பொறுப்பே நம்மிடம் வரும். ஆட்சி நம்மிடம் வந்துவிட்டால் பெண்களுக்குத் தேவையான அனைத்தையும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றுவோம். ஆனால், நீங்கள் கடைசி நேரத்தில் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறீர்கள்.
அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது உங்களுக்குத் தெரியும். மதுக்கடைகளில் இருந்து மக்களிடம் இருந்த பறித்த பணத்தில் ஒரு பகுதியைத் தான் உங்களுக்குத் திரும்பத் தந்து ஏமாற்றி, ஒட்டை வாங்குகிறார்கள். ஒரே ஒரு முறை நான் சொல்வதைக் கேளுங்கள்.. உங்களை வாழ வைக்கவே சொல்கிறேன்.. ஒரு முறை எனது பேச்சைக் கேளுங்கள்.
கல்வித் தரம்
பொருளாதார ரீதியாக அனைவரும் முன்னேற வேண்டும். அதற்கு அனைவரும் நன்கு படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். இந்தியாவின் மிக பெரிய பணக்காரனான அம்பானி பேரனுக்குக் கிடைக்கும் தரமான கல்வி நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது கனவு.. அதற்கு நாம் கோட்டையைப் பிடித்தாக வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications