கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 உயர்வு... நியாயமற்ற செயல் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை..!
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதால் நாடுமுழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
கடந்தாண்டு ஜூலை மாதம் ரூ.610-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் இப்போது ரூ.850-ஆக விலை உயர்ந்துள்ளது.
இதனிடையே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஐந்தாவது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல.''
''ஒருபுறம் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும்நிலையில் மறுபுறம் அதன் மீதான மானியம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு மே மாதம் சமையல் எரிவாயு விலை மீதான மானியம் சிலிண்டருக்கு 243.98 ரூபாயாக இருந்தது. அது படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் கடந்த சில வாரங்களாகத் தான் ரூ.24.95 மானியம்
வழங்கப்பட்டு வருகிறது.''
''சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அதை உணர்ந்து மத்திய அரசும், மாநில அரசும் சமையல் எரிவாயு சிலிண்டர் மீது கூடுதல் மானியம் வழங்கி, சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.''












Click it and Unblock the Notifications