'2026 வரை நானே தலைவர்' அன்புமணி முன் நிற்கும் ஒரே தீர்வு.. பாதையை காட்டிய ராமதாஸ்!
விழுப்புரம்: 2026 சட்டமன்றத் தேர்தல் வரை பாமகவின் தலைவர் நான்தான் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் கூட்டணியை நானே முடிவு செய்வேன் என்று கூறியுள்ள ராமதாஸ், கோலூன்றி நடந்தாலும் மக்களுக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அன்புமணிக்கு வேறு வழியில்லை என்று பார்க்கப்படுகிறது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் ஏற்படவில்லை. ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி உள்ளிட்டோருடன் 2 முறை சந்திப்பு நடத்தி ஆலோசித்த ராமதாஸ், சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

ராமதாஸ் பேட்டி
இதனால் பாமகவில் நிலவும் பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ராமதாஸ் பதில் அளித்துள்ளார். அதில், குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி இங்கும் பேசினார்கள். அன்புமணியுடனும் பேசினார்கள். அதன்பின் நானும் சென்னை சென்று அவர்களை சந்தித்தேன். ஆனாலும் முடிவு ஏற்படவில்லை.
2026க்கு பின் அன்புமணி
பாமகவில் இருப்பவர்கள் என்னுடைய தொண்டர்கள் அல்ல.. அவர்கள் வணங்கப்பட வேண்டிய தெய்வங்கள். சமூகநீதி பேரவைத் தலைவராக ஒருவரே இருக்க வேண்டும் என்பதல்ல.. அதனால் மாற்றி இருக்கிறோம்.. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின் எல்லாமே அவர் வாங்கிவிட்டு போகட்டும். அதுவரை நான்தான் தலைவர். வெறும் தலைவர் மட்டும்தான்.
தலைமைப் பண்பே இல்லை
இதனால் கூட்டணி அமைத்து அமைச்சர் பதவியை பெறப் போவதில்லை. நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டினேன். அதில் ஒருவர் லேசாக அன்புமணியை விமர்சித்தார். அது நல்ல விமர்சனம். ஆனால் அன்புமணி அவர் மீது கடுமையாக நடந்து கொண்டார். நம்முடைய தலைவருக்கு தலைமைப் பண்புகள் இல்லை என்று கூறினேன். அதுவும் ஒரு காரணம்.
அன்புமணி பதவிக்காலம்
தலைவராக இருந்த அன்புமணியை யாரும் பார்க்க முடியாது.. யாரிடமும் பேச மாட்டார். அன்புமணியின் 3 ஆண்டுகள் பதவிக் காலம் முடிந்துவிட்டது. மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பாமகவின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் எனக்கே உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த முடிவை நானே முடிவு செய்வேன்.
தீர்வு எட்டப்படுமா?
எனது வார்த்தையை ஏற்று செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுக் கொண்டால் தீர்வு எட்டப்படும். பாமகவின் நிறுவனர் தலைவர் நான்தான். வாக்களிக்கும் மக்கள் என் பக்கம் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தேர்தல் முடியும் வரை தனது பேச்சை கேட்டு அன்புமணி நடக்க வேண்டும் என்பதை ராமதாஸ் நேரடியாக வலியுறுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications