'மனநிறைவளிக்கிறது, உளமார்ந்த நன்றிகள்..' 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை.. ராமதாஸ் ட்வீட்
சென்னை: 10.5% வன்னியர் இட ஒதுக்கீட்டிற்குத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த அரசாணைக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
வன்னியர்கள், சீர் மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு வேலைகளிலும், கல்வி சேர்க்கையிலும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி வன்னியர் 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி
பிப்ரவரி 26ஆம் தேதி முதல் இந்த ஒதுக்கீடு முறையைச் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த அரசாணைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

மனநிறைவளிக்கிறது
தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது. பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும்.

அதிமுக தலைவர்களுக்கும் நன்றி
வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள்" என அவர் பதிவிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அதேபோல பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தனது ட்விட்டரில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களின் முன்னேற்றத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் 42 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தின் பயன் இது. சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா வழி நடப்பதில் பெருமிதம் கொள்வோம்!" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications