கட்சி மாநாடு, கூட்டங்களுக்கு காரில் வரக்கூடாது.. மா.செக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ராமதாஸ் ஆர்டர்!
சென்னை: பாமக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கார்களில் வந்து பங்கேற்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
"பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழுந்துகளில் வந்து பங்கேற்கக் கூடாது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் பெண்கள் உள்ளிட்ட பாமகவினரை பேருந்து, மூடுந்துகளில் (வேன்கள்) அழைத்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாக பயணித்து வர வேண்டும். இனிவரும் காலங்களில் இந்த அறிவுறுத்தலை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்." என அறிவுறுத்தி உள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பொதுவாக அரசியல் கட்சிகள் மாநாடுகள், பொதுக்கூட்டங்களை நடத்தும்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பார்கள். கட்சியின் திறனுக்கு ஏற்றவகையில், பேருந்துகள், வேன்களில் தொண்டர்கள் அழைத்து வரப்படுவார்கள். கட்சிக் கொடிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் அழைத்து வரப்படுவார்கள்.
கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்களின் போது சாலை விபத்துகள் போன்ற அசம்பாவிதங்களும் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அண்மையில் தவெக மாநாட்டின்போது கூட மாநாட்டுக்கு வந்த சிலர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் தான், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ள நிலையில் அண்மையில் விக்கிரவாண்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என மாநாட்டில் அறிவித்தார் தவெக தலைவர் விஜய். இதனால், தமிழக அரசியலில் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில்'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்று சமூகவலைதளத்தில் பதிவை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதன் காரணமாக, பாமக, பாஜக கூட்டணியில் இருந்து விலக இருக்கிறதா என அரசியல் அரங்கில் விவாதங்கள் எழுந்தன. அண்மையில் அது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸே விளக்கம் அளித்திருந்தார்.
'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்று சமூகவலைதளத்தில் நான் குறிப்பிட்ட நன்னூல் சூத்திரம் அரசியலுக்கும், கூட்டணிக்கும் பொருந்தாது. நான் பாஜகவில் இருந்து விலகவில்லை. இதில் எந்த நோக்கமும் இல்லை. இது நன்னூல் சூத்திரம். சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் இருக்கும். அதில் நிச்சயம் பாமகவும் இருக்கும். கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் ஆட்சியில் பங்கு பெறும். 2026 தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. அப்போதைய சூழலை வைத்து கூட்டணி முடிவு எடுப்போம். எல்லா கட்சிகளும் இடம்பெறும் வகையில் கூட்டணி இருக்கும். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications