"அன்புமணி கூட்டம் இருக்கே! அது ஒரு பஃபூன் கூட்டம்!" கோபத்தின் உச்சத்திற்கே போன பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: பாமகவில் இப்போது உட்கட்சி குழப்பம் வெடித்து இருக்கிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி தரப்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். இப்போது ஒரு தெருக்கூத்து நடக்கிறது.. அதைப் பார்த்து ரசியுங்கள் எனச் சொன்ன ராமதாஸ், பஃபூன் கூட தெருக்கூத்தில் வரும் என்று காட்டமான கருத்துகளைக் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள பிரதானக் கட்சிகளில் ஒன்று பாமக. தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலில் மிக முக்கிய கட்சியாக பாமக இருக்கிறது. வடமாவட்டங்களில் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக பாமக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் தேர்தல் காலங்களில் பாமக முக்கியத்துவம் பெறும். களத்திலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட போராட்டங்களை பாமக முன்னெடுத்துள்ளது.

ராமதாஸ்
அந்த பாமகவில் இப்போது உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது. அங்குக் கடந்த சில ஆண்டுகளாகவே அன்புமணி தரப்புக்கும் ராமதாஸ் தரப்புக்கும் இடையே மோதல் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அந்த மோதல் இப்போது வெளிப்படையாகவே வெடித்துள்ளது. இரு தரப்புமே மாறி மாறி மற்றொரு தரப்பை விமர்சித்து வருகிறார்கள். இதனால் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது எனத் தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
கடும் தாக்கு
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் சில காட்டமான கருத்துகளைக் கூறினார். சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில் இருந்து ராமதாஸ் அபிராமபுரம் இல்லத்திற்குச் சென்றார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் உட்கட்சி மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "தெருக்கூத்தில் பல வேஷங்கள் போடுவார்கள். பல நடிகர்கள் அந்த வேடங்களை நடிப்பார்கள். அதுபோலத் தான் இப்போது ஒரு தெருக்கூத்து நடக்கிறது, நீங்களும் பாருங்கள்" என்று சொன்னார்.
ஜிகே மணி உங்கள் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளாரே என்ற கேள்விக்கு, "அதெல்லாம் பரம ரகசியம் உங்களிடம் சொல்லக் கூடாது" என்று பதிலளித்தார். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவே ஜிகே மணி டெல்லி சென்றுள்ளதாகச் சொல்கிறார்களா என்று கேட்டதற்கு, "அது குறித்தும் உங்களிடம் சொல்லக் கூடாது. எல்லாம் ரகசியம்" என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்தார்.
அது ஒரு கும்பல்
இரு தரப்பும் மாறி மாறி மனு கொடுக்கிறீர்களே என்ற கேள்விக்கு, "கட்சியில் இரு தரப்பு என்ற பேச்சே இல்லை. அது ஒரு கும்பல்.. அந்தக் கும்பல் ஏதேதோ சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் வரை எல்லாம் இந்தப் பிரச்சினை போகாது. எங்கள் கட்சித் தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நேற்று முன்தினம் சுமார் 250 கட்சி நிர்வாகிகளிடம் பேசினேன். எல்லாரும் தெளிவாக இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.
பஃபூன் கூட்டம்
பாமகவின் முக்கிய தலைவரான ஜிகே மணியையே நீக்கச் சொல்லி அவர்கள் மனு கொடுத்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்களா, "அதான் சொன்னேனே தெருக்கூத்து நடக்கிறது. வேடிக்கை பாருங்கள்.. அதில் எல்லா கேரக்டரும் வரும் பஃபூன் கூட வரும்" என்றார். மேலும், கூட்டணி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்விக்கு அவர், "கூட்டணி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வரும். நானே கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பேன்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications