வெள்ளிக்கிழமை மங்களம் பொங்க..பாமகவில் முடிவுக்கு வரும் பஞ்சாயத்து! தூது போனவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
சென்னை: பாமகவில் நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில் விரைவில் சமூக தீர்வு எட்டப்படும் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் -ராமதாஸ் இடையே தனிப்பட்ட முறையில் சில நிர்வாகிகள் பேசி வருவதாகவும், விரைவில் தந்தையும் மகனும் நேரில் சந்தித்து பேசுவார்கள் என்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியையும் தேர்தலுக்கு தயார் செய்யும் வகையில் மாநாடு, ஆலோசனை கூட்டங்கள் என நடந்தேறியது. ஆனால் தந்தை மகன் இடையே ஏற்பட்ட மோதலால் நிர்வாகிகள் தொண்டர்கள் சுணக்கம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் இரு தரப்பும் மாறி மாறி முக்கிய நிர்வாகிகளை மாற்றி வருகிறது. அன்புமணி ராமதாஸ் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், ராமதாஸ் தனியாக செயற்குழு கூட்டத்தை நடத்தினார்.

அதில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் பாமக கட்சி விதி 15 படி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாசுக்கு தான் கட்சியில் அதிகாரம் என கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். மேலும் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ், பொது செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோர் இல்லாமல் நடக்கும் எந்த கூட்டங்களும் செல்லாது எனவும், கட்சி விதிகளை சுட்டிக் காட்டுகின்றனர்.
ராமதாஸ் குடும்ப விவகாரம் தான் தற்போது கட்சியில் எதிரொலிப்பதாகவும் குடும்பத்தில் இருக்கும் சிலர் கட்சிக்குள் தலையிடுவதால் தான் இவ்வளவு பிரச்சனை என்கின்றனர். இந்த நிலையில் 2026 தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் பாமகவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்களால் தொண்டர்கள் நிர்வாகிகள் உற்சாகம் இழந்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் இந்த விவகாரம் தொடர்பாக தந்தை மகன் இடையே தனித்தனியாக பேசி வருகின்றனர்.
சமுதாய ரீதியாக அவர்கள் கட்சி ஒன்று பட வேண்டும் என விரும்புகிறார்கள். அது மட்டும் அல்லாமல் பிற கட்சி நிர்வாகிகள், அரசியல் ஆலோசகர்களும் ராமதாஸ் அன்புமணி இடையே பேசி வருகிறார்களாம். அதுமட்டுமல்லாமல் அன்புமணி தரப்பு நிர்வாகிகளும் ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளுமே தந்தையும் மகனும் ஒன்று சேர வேண்டும் என விரும்புகின்றனர். இந்த நிலையில் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
மேலும் என்ன நடந்தாலும் கட்சியின் எதிர்காலம் அன்புமணி தான் என்பதால் நீங்கள் நிறுவனராகவே தொடருங்கள். அன்புமணி தலைவராக தொடரட்டும். கூட்டணி என எந்த விவகாரமாக இருந்தாலும் இருவரும் பேசி நல்ல முடிவாக எடுங்கள். ஆனால் நிர்வாகிகள் தொண்டர்களை குழப்பம் அடையச் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அன்புமணி ராமதாஸ் இடமும் எடுத்துச் சொல்லப்பட்டதாகவும் நான் எப்போதுமே சமாதானத்துக்கு தயார்தான் ஐயா தான் நிர்வாகிகளை நீக்கி வருகிறார் என அன்புமணி கூறினாராம்.
இந்த தகவலும் ராமதாஸ் தரப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக வியாழக்கிழமைகளில் ராமதாஸ், செய்தியாளர்களை சந்திப்பார் அந்த வகையில் நாளை நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும், வெள்ளிக்கிழமை நல்லது நடக்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications