மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
சென்னை: மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக. அதுவும் சேர்ந்து மூழ்க போகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக - பாஜக கூட்டணி குறித்து விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு திமுக கூட்டணியில் நிறைவடைந்த நிலையில் பாஜக, அதிமுக கூட்டணியில் இன்னும் பேச்சுவார்த்தைகள் நிறைவடையவில்லை. பாமக அதிமுக கூட்டணியில் இணைவதாக செய்திகள் வெளியான நிலையில், திடீரென பாஜக உடனான கூட்டணியில் இணைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது பாமக. 2019ல் பாஜக - அதிமுக கூட்டணியில் பாமகவும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், மீண்டும் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது பாமக.

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்று காலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "மூழ்கும் கப்பலில் பாமக ஏறியுள்ளது. அதுவும் சேர்ந்து மூழ்க போகிறது." எனக் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "பாஜகவினர் ஏறக்குறைய ரூ.7,000 கோடியை தேர்தல் பத்திரத்தின் மூலம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பெற்றது பிச்சையா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை பார்த்து கேட்கிறாரே அது பிச்சையா? இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல வேண்டும். தமிழக மக்களைப் பார்த்து பிச்சைக்காரர்கள் என நிதியமைச்சர் பேசுவார். இதையெல்லாம் அண்ணாமலை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை எட்டப்பன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
பிரதமர் மோடி சர்வதிகார ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி் நடத்திக் கொண்டு இருக்கிறார். தேர்தல் பத்திரம் பற்றி பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும். இந்திய மக்கள் கேள்விபடாத நவீன விஞ்ஞான ஊழலை மோடி செய்திருக்கிறார். பாஜக ஆட்சியின் முகத்திரை தினம் தினம் கிழிந்துகொண்டு இருக்கிறது.
இரண்டு, மூன்று நாட்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளிவரும். தமிழகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டால் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் சூழல் ஏற்படலாம். காங்கிரஸ்தான் அனைவருக்குமான இயக்கம். சமூக நீதிக்கான கட்சி, அனைவரையும் தூக்கி பிடிக்கின்ற கட்சி. மூழ்கும் கப்பலில் பாமக ஏறியுள்ளது. அதுவும் சேர்ந்து மூழ்க போகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் தேதிகள் வெளியிடப்படும். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். அவர்கள் இயந்திரங்களை நம்பி தேர்தலில் நிற்கிறார்கள். மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications