மாம்பழம் சின்னம் யாருக்கு? சென்னை ஐகோர்ட்டை அணுக உச்சநீதிமன்றம் ஆணை! ராமதாஸுக்கு பின்னடைவு!
சென்னை: அன்புமணிக்கு வழங்கப்பட்ட மாம்பழம் சின்னத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராமதாஸ். கட்சி பிரச்சனை முடிந்தபிறகே சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ராமதாஸ் மனு அளித்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக எங்களிடம் இருக்கும்போது சின்னத்தை முடக்க கோருவது ஏற்புடையதல்ல என அன்புமணி தரப்பு வாதத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும், பாமக தலைவர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பாக உத்தரவை ரத்து செய்து தன்னை பாமக தலைவராக அறிவிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில் மாம்பழ சின்னத்தை முடக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய் மாலியா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ராமதாஸ் தரப்பில், கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறை. குலுக்கல் முறையில் கொடுக்கும் முறையும் பின்பற்றவில்லை. இதனால் கட்சி யாருக்குச் சொந்தம் என்பது தீர்மானமாகும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அன்புமணி தரப்பில், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தங்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக வாதம் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார்? இரு தரப்பும் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் ஆடுகிறது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சி பிரச்சனை முடிந்தபிறகே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு தெரிவித்தது. பாமக எங்களிடம் இருக்கும்போது சின்னத்தை முடக்க கோருவது ஏற்புடையதல்ல என அன்புமணி தரப்பு தெரிவித்தது. இதையடுத்து மாம்பழம் சின்னத்தை எங்களால் தற்போது முடக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications