“அன்புமணியை நம்பாதீங்க! பதவி வெறியும் பணத்தாசையும் பிடித்தவர்”: ராமதாஸ் பேரன் முகுந்தன் பரபர பேட்டி!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் குடும்பத்தை பிரித்தது அன்புமணியும், அவரது மனைவி செளமியா மற்றும் அன்புமணியின் பதவிவெறியும் பணத்தாசையும் தான் என ராமதாஸின் பேரன் முகுந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாமகநிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இரு வேறு துருவங்களாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அன்புமணி தரப்பு பாமக, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றனர்.

இந்நிலையில், பாமக வேட்பாளர்களுக்காக அன்புமணியின் மகள்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்தவகையில், பென்னாகரத்தில் பிரச்சாரம் செய்த அன்புமணியின் மகள்கள், "எங்கள் குடும்பம் ஐயா (ராமதாஸ்) தலைமையில் ஒற்றுமையாக இருந்தது. ஆனால் இன்று என் ஐந்து மாதக் குழந்தையைக் கூட ஐயா பார்க்க முடியாதபடி ஜி.கே. மணி தடுத்துவிட்டார். தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவர், எங்கள் குடும்பம் நாசமாகப் போக வேண்டும் என நினைக்கிறார். இவரைப் போன்ற கேவலமான மனிதரைப் பார்க்க முடியாது.
சொந்தப் பிள்ளையை நம்பாமல் துரோகியை நம்பும் அளவுக்கு ஐயாவின் மனதை மாற்றிவிட்டார்கள். இதனால் எங்கள் தலைவர் (அன்புமணி) எவ்வளவு மனக்கஷ்டத்துடன் கட்சியை வழிநடத்துகிறார் தெரியுமா? மக்கள் முட்டாள்கள் என நினைத்து காசு கொடுத்து மயக்கப் பார்க்கிறார்கள். எங்கள் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், இந்தத் துரோகிகளை நீங்கள் தேர்தலின் மூலம் துரத்தி அடிப்பதுதான் ஒரே வழி" எனப் பேசினர்.
இந்நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸின் பேரன் முகுந்தன், "நான் பேட்டி கொடுத்ததும் இல்லை, பேசியதும் இல்லை. ஆனால் பிரச்சனை என்னால் ஆரம்பித்தது. எனக்கு சட்டமன்ற தொகுதி சீட் கொடுப்பதாக அன்புமணி தெரிவித்தார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எங்களுக்கு பதவி ஆசை இல்லை. நான் பதவியை ராஜினாமா செய்தபோது மருத்துவர் ராமதாஸ் கோபப்பட்டார்.
அய்யாவின் முகம் வேண்டும், பெயர் வேண்டும், ஆனால் அய்யா ராமதாஸ் வேண்டாம் என அன்புமணி கூருகிறார். ராமதாஸ் குடும்பத்தை ஜிகே மணி பிரித்துவிட்டதாக கூறுகிறார்கள். குடும்பத்தை பிரித்தது அன்புமணியும், அவரது மனைவி செளமியா அன்புமணியும் தான். அன்புமணியின் பதவிவெறியும் பணத்தாசையும் தான். இது தொடர்பாக பேச நான் தயாராக உள்ளேன். இது தொடர்பாக பேச சவால் விடுக்கிறேன்.
யாரை வேண்டுமானாலும் நம்புங்கள், ஆனால் அன்புமணியை நம்பாதீங்க.. அரசியலில் எந்த தொகுதியாக இருந்தாலும் போட்டியிட முழு செலவையும் அன்புமணியே ஏற்பதாக கூறினார். மைக்கில் எப்படி பேசனும் என்ற நாகரீகம் அன்புமணிக்கு தெரியாதா? ஆதாயத்திற்காக நாங்கள் ராமதாசிடம் இல்லை. உங்க அப்பா ராமதாசை வந்து பார்த்துக்கோங்க... ஒருத்தர் மேல எவ்வளவு பழி போடமுடியுமோ அந்த அளவிற்கு செய்கிறார்கள், குழந்தையை வைத்துக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்கள்.
மக்களிடம் கைக்குழந்தையை எடுத்துச் செல்லும் அன்புமணியின் மகள்கள் ஏன்? தைலாபுரம் இல்லத்திற்கு வர முடியவில்லை. என்னை சமாதானப்படுத்துவதற்காக, அன்புமணியின் ஆதரவாளர் கணேஷ் குமார் என்னை தொடர்பு கொண்டு தேர்தலில் நிற்க வைப்பதாகவும், அதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் என்னிடம் உறுதியளித்தார். இந்த ஆதாரத்தை விரைவில் நான் வெளியிடுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications