அன்புமணி பொதுக்குழு.. ராமதாஸ் மகளிர் மாநாடு! மாஸ் காட்டியது யார்? உச்சகட்ட பரபரப்பில் பாட்டாளிகள்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் அன்புமணி. அதே நேரத்தில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் ராமதாஸ். இருதரப்பிலும் தீவிரமாக காய் நகர்த்தி வரும் நிலையில் இறுதி வெற்றி யாருக்கு? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல். கட்சியின் நிறுவனரான ராமதாஸ், கட்சியின் தலைவரும் தனது மகனுமான அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்ததோடு அவரை செயல் தலைவராக அறிவித்து, கூட்டணி தொடர்பான முடிவை நான் தான் எடுப்பேன் எனக் கூறினார்.
அதற்குப் பிறகு தற்போது வரை பாமகவில் பல்வேறு விவகாரங்கள் அரங்கேறி விட்டது. அன்புமணி ஆதரவு நிர்வாகிகளான பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் பேரவை பாலு ஆகியோரை நீக்கியதாக அறிவித்தார். ஆனால் அவர்கள் அனைவரும் பதவியில் தொடர்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.

அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பிற நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் என நீக்கப்பட்டனர். மேலும் அந்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளையும் ராமதாஸ் அறிவித்தார். ஆனால் கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர் நான் நியமித்த அனைவரும் தொடர்கின்றனர் என அறிக்கை வெளியிட்டார் அன்புமணி. அதற்கு பிறகு தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணி பொதுக்குழு தேதியை அறிவித்தார்.
ராமதாஸ்
அதற்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் 100 நாள் சுற்றுப்பயணத்தையும் அன்புமணி தொடங்கினார். ஆனால் நிறுவனரின் அனுமதி இன்றி பொதுக்குழுவுக்கும், சுற்று பயணத்திற்கும் அனுமதி தரக்கூடாது என்ற ராமதாஸின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. நீதிமன்றத்திலும் அன்புமணியே வெற்றி பெற்ற மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக பாமக பொதுக்குழு அரங்கேறியது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தான் தலைவர் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இந்த தீர்மானம் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
வன்னியர் மகளிர் மாநாடு
இதற்கிடையே நேற்று பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டை நடத்தினார் ராமதாஸ். பாமக பொதுக்குழுவில் ராமதாஸின் புகைப்படங்கள் இடம் பெற்றதோடு அவருக்கென தனி இருக்கை அமைக்கப்பட்டது. ஆனால் ராமதாஸ் நடத்திய மாநாட்டில் அன்புமணியின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. மாறாக ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் புகைப்படங்கள் இடம் பெற்றது .மேடையிலும் ஒரு தீர்மானத்தை வாசித்தார் ராமதாஸின் மகள் காந்தி.
பாமக பொதுக்குழு கூட்டம்
இப்படி இரு தரப்பும் மாநாடு பொதுக்குழு கூட்டம் என இருக்கும் நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பது தான் எதிர்பார்ப்பு. வரும் 17ஆம் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே பொதுக்குழுவை கூட்டிய அன்புமணி தேர்தல் ஆணையத்துக்கு அந்த தீர்மானங்களை அனுப்ப இருக்கிறார். ராமதாஸ் நியமித்த நிர்வாகிகள் அனைவருமே கடந்த சில வாரங்களுக்குள் நியமிக்கப்பட்டவர்கள். ஆனால் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் ராமதாஸ் மற்றும் அன்புமணி இணைந்து நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக
பாமக வீதி 161-ன் படி தலைவர், பொதுச் செயலாளர் இல்லாமல் எந்த நிகழ்வையும் நடத்த முடியாது எனும் அன்புமணி தரப்பு ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டினாலும் அது செல்லாது எனவும், அன்புமணி தரப்பே உண்மையான பாமக என்கிறது. மேலும், நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என எங்கு சென்றாலும், அன்புமணி தரப்பு தான் வெற்றி பெறும் என்கின்றனர். பாமகவில் இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து என்ன? என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications