102 தலைப்புகளில் 401 ஆலோசனைகள்... நிழல் பட்ஜெட்டை வெளியிட்டார் டாக்டர். ராமதாஸ்
சென்னை: பாமக தயாரித்த 2019-2020-ம் ஆண்டுக்கான, 17-வது பொது நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார்.
பா.ம.க. கடந்த 2003-2004-ம் ஆண்டு முதல் பொது நிழல் பட்ஜெட் அறிக்கைகளை மக்கள் மன்றத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 16 நிழல் பட்ஜெட் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 2019-2020-ம் ஆண்டுக்கான, 17-வது பொது நிழல் பட்ஜெட் இன்று சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பொது நிழல் பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டார்.

நிழல் பட்ஜெட் அறிக்கை
வழக்கம் போலவே தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு பெருக்கம், வறுமை ஒழிப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் என 102 தலைப்புகளில் 401 ஆலோசனைகள் நிழல் பட்ஜெட் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

முக்கிய அம்சங்கள்
அந்த வகையில், 2019-20 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.4,21,026 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் மொத்த வருவாயை விட ரூ.1,90,509 கோடி அதிகமாக இருக்கும். 2019-20 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.69,823 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.6,789 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும்.

வேலையில்லாத் திண்டாட்டம்
இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% என்ற உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றை தமிழக அரசு அமைக்கும்.

உதவித்தொகை
படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு தோல்வி ரூ.1,000, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி ரூ.2,000, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி ரூ.3,000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000, பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5,000 ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கான திட்டம்
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் 18 ஆவது வயதில் ரூ.5 லட்சம் கிடைக்கும் வகையில் அவர்கள் பெயரில் வங்கிகளில் குறிப்பிட்ட தொகை வைப்பீடு செய்யப்படும். இது போன்று பல்வேறு திட்டங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 வழிச் சாலை
சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலைக்காக 7,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், 10,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வளர்ச்சி என்பது வாழ்வாதாரங்களை அழிப்பதாக இருக்கக்கூடாது என்பதால், இத்திட்டம் கைவிடப்படும்.

ராமதாஸ் பேட்டி
அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவது வேதனை அளிப்பதாக கூறினார். மேலும், நிழல் பட்ஜெட்டை தமிழக அரசு செயல்படுத்தும் பட்சத்தில், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்பது உறுதி என்றார்.












Click it and Unblock the Notifications