இந்திய எல்லைக்குள் ஊடுருவி தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல்- இலங்கை கடற்படைக்கு அன்புமணி கண்டனம்
தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கியதற்காக இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்பது அன்புமணி கோரிக்கை.
சென்னை: இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவி தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக இன்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

கடந்த 24-ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அடுத்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதை சகித்துக் கொள்ள முடியாது.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட இரு நிகழ்வுகளும் இந்திய கடல் எல்லைக்குள் தான் நடந்துள்ளன. மீனவர்கள் எல்லை தாண்டினால் கூட அவர்களைத் தாக்கும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு இல்லை. அத்தகைய சூழலில் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்கியதை இந்தியா வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை மத்திய அரசு நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த 21-ந் தேதி தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக இரும்பு கம்பிகளால் தாக்கினர். இதில் 6 மீனவர்கள் படுகாயமடைந்தனர். 6 மீனவர்களும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், 6 மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அத்துடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார். அதில், நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், IND-TN-06-MO-3051 என்ற பதிவெண் கொண்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகினைச் சூழ்ந்துகொண்டு, அப்பாவி தமிழக மீனவர்களை இரும்புக் கம்பி, கட்டை, சுத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கினர். இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. மத்திய அரசு இதைக் கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், இலங்கை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவும், தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications