Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“லா பாயிண்டை” பிடித்த அன்புமணி.. “குடிகார நாடு” என்று சொல்றாங்களாம்! செந்தில் பாலாஜிக்கு பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுவிலக்கு கொள்கை மாநில உரிமையாக இருக்கும் நிலையில் மக்கள் நலனுக்காக அதிகாரத்தை பயன்படுத்த தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தானியங்கி மதுபானம் விற்பனை குறித்த தனது விமர்சனத்துக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்து விரிவாக அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "மதுவிலக்கு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏழாவது அட்டவணையில் இரண்டாவதாக உள்ள மாநிலப் பட்டியலில் எட்டாவதாக இடம் பெற்றுள்ளது. அதன்படி மது உற்பத்தி, வணிகம், விற்பனைத் தடை உள்ளிட்ட எந்த முடிவையும் மாநில அரசு தான் எடுக்க முடியும்.

PMK president Anbumani Ramadass listed his work on Liquor ban

இந்த விஷயத்தில் மத்திய அரசோ, நாடாளுமன்றமோ எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது ஏனோ எல்லாம் தெரிந்த செந்தில் பாலாஜிக்கு தெரியவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போதைக்கு இருக்கும் இயக்கம் மாநில தன்னாட்சி பேசும் இயக்கம். எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என்பது தான் தன்னாட்சி தத்துவத்தின் அடிநாதம் ஆகும்.

இப்படி அனைத்து துறைகளிலும் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என்று ஒருபுறம் கூறிக் கொண்டு, இன்னொருபுறம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருந்தும் கூட, அதை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்; நீங்கள் நாடாளுமன்றத்தில் வாதிடுங்கள் என்பது எந்த வகையான தன்னாட்சி கொள்கை? திராவிட மாடலில் இப்படித்தான் தத்துவம் வகுக்கப்பட்டிருக்கிறதா?

இவற்றைக் கடந்து செந்தில் பாலாஜி அவர்கள் தெரிந்து கொள்வதற்காக சில செய்திகளை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

1. மத்திய அரசால் மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. ஆனால், அது தொடர்பான வழிகாட்டுதலை வழங்க முடியும். அதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, தேசிய ஆல்கஹால் கொள்கையை (National Alcohol Policy) வகுத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தேன்.

2. திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகள் வரும் போது, மது தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகம் திரையில் இடம் பெறுவதை கட்டாயமாக்கினேன்.

3. மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதியை உலக மது இல்லா நாளாக (World Dry Day) அறிவிக்க வேண்டும்; அந்த நாளில் உலகின் எந்த மூலையிலும் மது விற்பனை செய்யப்படக்கூடாது என்று அறிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனரிடமும், ஜெனிவாவில் நடைபெற்ற உலக நலவாழ்வு பொது அவை (World Health Assembly) கூட்டத்திலும் வலியுறுத்தினேன். எனக்கு பிறகு மத்திய சுகாதார அமைச்சர்களாக வந்தவர்கள் அதை தொடர்ந்து வலியுறுத்தாததால் அது இன்று வரை சாத்தியமாகாமல் போய்விட்டது.

4. மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பிறகும் கூட, மத்திய அரசு அதன் அதிகாரத்திற்குட்பட்டு மதுவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 முறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன். மதுவிலக்கு குறித்து இனி பேசும் போது இதையெல்லாம் அவர் அறிந்து கொண்டு பேச வேண்டும்.

டாஸ்மாக் வருமானத்தை வைத்துக் கொண்டு அரசை நடத்த வேண்டிய தேவை திமுகவுக்கு இல்லை என்றும் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். இது உண்மையானால், அவர் செய்திருக்க வேண்டிய வேலை மதுப்புட்டி வழங்கும் தானியங்கி எந்திரத்தை ஆய்வு செய்வது அல்ல... தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட வேண்டியது தான். ஒருபுறம் மது வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறிக் கொண்டு, இன்னொருபுறம் 2023 - 24 ஆம் ஆண்டில் மது வணிகத்தின் மூலம் ரூ.50,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிப்பது, படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழியைத் தான் நினைவூட்டுகிறது.

தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு மது வணிகத்தின் மூலமே கிடைக்கிறது. இது ஓர் அரசின் சாதனையாக இருக்க முடியாது; வேதனையாகத் தான் இருக்க முடியும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மது வணிகம் மூலம் கிடைக்கும் வருமானம் அரசுக்கு தேவையில்லை என்றால், மூடுவதாக அறிவிக்கப்பட்ட 500 மதுக்கடைகளும் தமிழ்நாட்டின் அதிக வருமானம் கொண்ட 500 மதுக்கடைகளாகத் தான் இருக்க வேண்டும்.

அவற்றை மூடாமல் குறைந்த வருமானம் கொண்ட மதுக்கடைகளை தேடித்தேடி பட்டியல் தயாரிப்பதில் இருந்தே உயிரைப் பறிக்கும் மது வருவாயைத் தான், தமிழக அரசு உயிராக நம்பிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். மதுவிலக்குத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே செந்தில் பாலாஜி அவருக்கு கொடுக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதில் தான் தீவிரமாக இருக்கிறார்.

அதற்காக அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் தமிழ்நாடு என்றாலே குடிகார நாடு என்று பிறர் தூற்றும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்று தான் அண்ணா கூறினார். ஆனால், அவர் தொடங்கிய கட்சியின் ஆட்சியில் எங்கும் மது... எதிலும் மது என்ற நிலை உருவாகி வருகிறது. அறிஞர் அண்ணா மறைந்திருந்தாலும், இந்த சீரழிவை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.

செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் ஆட்சியில் தான் விளையாட்டு அரங்குகளில் தாராளமான மது வணிகம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அவரது டாஸ்மாக் ஆட்சியில் தான் பன்னாட்டு நிகழ்வுகளில் மது வழங்க அனுமதிக்கப்படுகிறது. இவை எல்லாம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்காகவா, அல்லது பொது சேவைக்காகவா? என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் விளக்க வேண்டும்.

ஒன்று மட்டும் உறுதி... செந்தில் பாலாஜி மட்டும் மதுவிலக்குத்துறை அமைச்சராக தொடர்ந்தால், அவரால் இன்றைய தமிழக அரசுக்கு ஏற்படும் அவப்பெயர் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நீங்காது என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும்.

* இந்தியாவிலேயே மதுவணிகத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
* இளம் கைம்பெண்கள் அதிகம் பேர் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
* சாலை விபத்துகளில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
* தற்கொலைகளில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
* மனநல பாதிப்புகளில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
* இளம் வயதில் மது அருந்தத் தொடங்குவதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.

மேற்கண்ட அனைத்து சீரழிவுகளுக்கும் மது வணிகம் தான் காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை எதுவும் பெருமைப்படுவதற்கான விஷயங்கள் அல்ல... தலைகுனிவுக்கான விஷயங்கள் தான். 1970-களில் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளில் மூன்று தலைமுறைகள் மதுவுக்கு இரையாகிவிட்டன. இனிவரும் தலைமுறைகளாவது மதுவின் சீரழிவில் இருந்து மீட்கப்பட வேண்டும். அதற்கான ஒரே தீர்வு படிப்படியாகவோ, உடனடியாகவோ தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+