திமுக புள்ளியை சந்தித்த அன்புமணி.. ஈசிஆரில் நடந்த அந்த மீட்டிங்.. ஆட்டம் ஆரம்பம்! பாமகவில் பரபரப்பு!
சென்னை: பாமகவில் தந்தைக்கும் மகனுக்குமான மோதலுக்கு 3 சந்திப்புகளும் உறுதி மொழிகளும் தான் காரணம் என்கிற புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை கழட்டி விட்டது அதிமுக.
அதே சமயம், வட தமிழகத்தில் வலுவாக உள்ள பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சித்தார் எடப்பாடி. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பினார். டாக்டர் ராமதாஸ்-சி.வி.சண்முகம் சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பில், அதிமுக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டார் ராமதாஸ்.

பாஜக கடும் கோபம்
இதற்கான பரிசுத் தொகையும் பேசி முடிக்கப்பட்டது. தங்களுடனான உறவை முறித்துக்கொண்டதால் அதிமுக தலைமை மீது பாஜக தேசிய தலைமைக்கு கடும் கோபம். மேலும், அதிமுக-பாமக கூட்டணி உருவாகலாம் என்கிற பேச்சும், ராமதாஸ்-சண்முகத்தின் சந்திப்பையும் அறிந்த பாஜக தலைமை, அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தால் அதிமுகவுக்கு அது ப்ளஸ் பாயிண்டாக இருக்கும் என்று கணக்கிட்டது.
இதனையடுத்து தமிழக பாஜகவுக்கு சில உத்தரவுகள் டெல்லியிலிருந்து கிடைத்தன. குறிப்பாக எந்த முயற்சி வேண்டுமானாலும் செய்யுங்கள் ; ஆனால், பாஜகவுடன் தான் பாமக கூட்டணி வைக்க வேண்டும் என்பது அந்த உத்தரவு. உடனே, அன்றைக்கு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, பாஜகவை சேர்ந்த சினிமா தொழிலதிபர் ஐசரி கணேஷை சந்தித்து விவாதித்தார்.
ஈசிஆர் பங்களா
அவர்கள் இருவரும் அன்புமணியை தொடர்புகொண்டு பேசினர். கிழக்கு கடற்கரை சாலை பங்களாவுக்கு அன்புமணியை வரவழைத்தனர். அந்த பங்களாவில் தனது மனைவியுடன் சென்று அவர்களை சந்தித்தார் அன்புமணி. பாஜகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 3 மணி நேரம் நடந்த அந்த சந்திப்பில், பாஜகவுடன் தான் கூட்டணி ; இது உறுதி என்று அன்புமணி வாக்குக் கொடுத்தார். இதற்காக, கனமான பரிசுகள் பேசி முடிக்கப்பட்டன.
பாஜகவுடன் தான் பாமக கூட்டணி வைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சி போல, அதிமுக-பாமக கூட்டணியை ராமதாஸ் உறுதி செய்ததை அறிந்த திமுக தலைமை, அதிமுக-பாமக கூட்டணி உருவாகக் கூடாது என்று திட்டமிட்டது. இந்த கூட்டணி உருவானால் வட தமிழகத்தில் சில தொகுதிகளை திமுக இழக்கும் என்ற ரிப்போர்ட் கிடைத்ததால் அதிமுவுடன் பாமக சேர்வதை தடுக்க நினைத்தது திமுக.
சபரீசன் ஆலோசனை
உடனே, திமுக குடும்பத்தின் வி.வி.ஐ.பி.யான சபரீசன், அன்புமணியுடன் பேசினார். இருவரின் சந்திப்பும் நடந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த சந்திப்பு 2 மணி நேரம் நடந்தது. கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி தந்தார். பாஜக தந்த பரிசுக்கு இணையான பரிசும் திமுக கொடுக்க முன்வந்தது. அதனை ஏற்றுக் கொண்டார். பாஜகவுடன்தான் கூட்டணி என அன்புமணி உறுதிக் கொடுத்ததை திமுக அறிந்திருந்தால் அன்புமணியை சந்திக்கும் முயற்சையை திமுக கைவிட்டிருக்கும். ராமதாஸ் உறுதி செய்ததை மட்டும் நம்பி, அன்புமணியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது திமுக. இதனையடுத்தே, அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் டாக்டர் ராமதாசை சந்தித்து அதிமுக கூட்டணி வேண்டாம்; பாஜகவுடன் கூட்டணிதான் வேண்டும்; அதற்கு சம்மதிக்க வேண்டும் என்று கெஞ்சி, அப்பாவை வழிக்கு கொண்டு வந்தனர். ஆனால், இரண்டு சந்திப்புகளில் நடந்தவைகளையும், பரிசு பொருட்களையும் ராமதாசிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்.
பாஜக-பாமக கூட்டணி அமைந்ததை ஜீரணிக்க முடியாத எடப்பாடியும் சி.வி.சண்முகமும் ராமதாசிடம் வருத்தப்பட்டனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி அமைத்து பிரச்சனையை நேர் செய்கிறேன் என்று உறுதி தந்தார் ராமதாஸ். இதனால் பிரச்சனை அமைதியானது. இந்த நிலையில்தான், பாஜக கூட்டணிக்காகவும், அதிமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதற்காகவும் அன்புமணியின் சந்திப்புகளையும், வாங்கிய பரிசுகளையும் தெரிந்து கொண்டார் ராமதாஸ்.
உண்மை தெரிந்து கோபம்
அந்த உண்மை தெரிந்து டென்சனானார். குடும்பத்தில் களேபரம் வெடித்தது. தலைவர் என்கிற பொறுப்பில் இருப்பதால் தானே கூட்டணியை பத்தி உன்னிடம் பேசுகிறார்கள்; நீ அதனை முடிவு செய்கிறாய்; இனியும் இதே நிலை நீடித்தால் நான் ஜோக்கர் ஆகிவிடுவேன் என்று அன்புமணியை குடும்பத்தினர் முன்பு திட்டித் தீர்த்த ராமதாஸ், மறுநாளே, கட்சி தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கினார். அந்த கோபம் தணியாமல் மெல்ல மெல்ல அதிகரித்து அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தும் அளவுக்கு போனார் ராமதாஸ் என்கிற தகவல்கள் கிடைக்கின்றன












Click it and Unblock the Notifications