என் மகனுக்கு பதவி இல்லையா.. ராமதாஸ் ஆதரவுடன்.. தம்பி அன்புமணிக்கு எதிராக களம் வந்த அக்கா காந்திமதி!
புதுச்சேரி: பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி இடத்திற்கு மகள் காந்திமதியை ராமதாஸ் கொண்டு வந்துள்ளார். பாமகவின் இளைஞரணித் தலைவராக முகுந்தன் நியமனம் செய்யப்பட்டதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது மகன் முகுந்தனுக்கு பதிலாகக் காந்திமதி நேரடியாக அரசியலில் களம் கண்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் என்று மொத்தமாக 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாமகவின் சிறப்புப் பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிரான தீர்மானம் உட்பட மொத்தமாக 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் பாமகவின் தலைவராக ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் பாமகவில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிக்கை வாசிக்கப்பட்டது.
இதனால் பாமகவில் இருந்து படிப்படியாக அன்புமணியை நீக்கும் நடவடிக்கையை ராமதாஸ் எடுத்து வருவதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் அன்புமணியின் இடத்தில் இம்முறை மகள் காந்திமதியைக் கொண்டு வந்துள்ளார் ராமதாஸ். அன்புமணி - ராமதாஸ் இடையிலான மோதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.
பாமகவின் இளைஞரணித் தலைவராக முகுந்தனை கொண்டு வந்த போது, மேடையிலேயே மைக்கை தூக்கிப் போட்டு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். ராமதாஸின் மூத்த மகளான காந்திமதியின் மகன் தான் முகுந்தன் பரசுராமன். ஆனால் முகுந்தனின் செயல்பாடுகளுக்கு அன்புமணி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது.
தற்போது அன்புமணியுடன் நேரடியாக மோதி வரும் ராமதாஸ், தற்போது அன்புமணியின் இடத்திற்குக் காந்திமதியை கொண்டு வந்திருக்கிறார். வழக்கமாக பாமக பொதுக்குழு மேடையில் ராமதாஸ் அருகில் வலது பக்கத்தில் அன்புமணிக்கு இடம் ஒதுக்கப்படும். அந்த இடம் இந்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் காந்திமதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று அறிவித்து கட்சித் தொடங்கிய ராமதாஸ், முதலில் மகன் அன்புமணியையும், தற்போது மகள் காந்திமதியையும் அழைத்து வந்திருக்கிறார். அதேபோல் அன்புமணியும் தனது மகள்களை அரசியல் மற்றும் தேர்தல் பணிகளை செய்வதற்குக் களமிறக்கி இருக்கிறார். இதனால் பாமக தொண்டர்கள் மத்தியில் யார் பக்கம் செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications