அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு.. மேல்முறையீட்டுக்கு செல்லும் ராமதாஸ்.. என்ன நடக்கும்?
சென்னை: அன்புமணி தலைமையில் நடக்கவுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி இன்று காலை ராமதாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் பொதுக்குழு நடக்குமா என்ற சந்தேகம் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
பாமகவில் 10 மாதங்களுக்கும் மேலாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் நடந்து வருகிறது. பாமகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தாமே தலைவர் என்று அறிவித்துக் கொண்டார். ஆனால் பாமகவை கைப்பற்றும் நோக்கில் அன்புமணி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். இதற்காக டெல்லிக்கும் ஒருமுறை பயணம் மேற்கொண்டார்.

தொடர்ந்து பாமக சார்பாக உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வரும் அன்புமணி, இன்று பாமகவின் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை ராமதாஸ் தரப்பு நாடி இருந்தது. ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் மற்றும் அன்புமணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ராமதாஸ் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமாகவும், அன்புமணி நேரடியாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறையில் ஆஜராகினார். இரவு 8 மணி வரை விசாரணை நடந்த நிலையில், இரவு 8.45 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாமகவின் பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று உத்தரவிட்டு, ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால் ராமதாஸ் தரப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் தரப்பில், தேவையென்றால் ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் ராமதாஸ் தரப்பு இன்று அன்புமணி பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறது.
ஒரு பக்கம் அன்புமணி தரப்பில் பொதுக்குழுவுக்குத் தயாராகி வரும் சூழலில், ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டத் தயாராகி வருகிறது. இதனால் இன்றைய நாள் பாமகவின் வரலாற்றில் மிக முக்கிய நாளாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ராமதாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், உடனடியாக தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications