“பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆன பின்னரும்.. ஆட்சிக்கு வராமல் இருப்பது வருத்தமே” - அன்புமணி
சென்னை: பாட்டளி மக்கள் கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் ஆட்சிக்கு வராமல் இருப்பது வருத்தமளிப்பதாக அன்புமணி கூறியுள்ளார். இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது, "மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து வீட்டுக்கு அனுப்பி, நம்முடைய ஆட்சி அமைய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இந்த பொதுக்குழு இங்கே வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த நான்கு நாட்களாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று நம்முடைய பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து, நாம் எப்படி வெற்றி பெற இருக்கின்றோம் என்ற செய்தியை சொல்லி, இன்னும் பத்து மாதத்திலே சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வர இருக்கிறது, அதற்கு நீங்கள் தயாராக வேண்டும் நம் கட்சியை பலப்படுத்த வேண்டும், இன்னும் கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், இளைஞர்களை அழைத்து வரவேண்டும் என்ற செய்திகளை சொல்லத்தான் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
கள்ளக்குறிச்சி, மிக பின்தங்கிய மாவட்டம். நம்முடைய இனமான காவலர் சமூக நீதி போராளி, மருத்துவர் அய்யா 36 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். தொடங்கிய நோக்கம் அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வேண்டும் என்பதுதான்.
எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது. என்னவென்றால், இன்னும் கட்சி ஆட்சிக்கு வரவில்லையே என்பதுதான். 36 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கட்சி, தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ சாதனைகள் செய்த கட்சி, இந்தியாவுக்கு எவ்வளோ மாற்றங்களை கொண்டு வந்த கட்சி, நம் கட்சிக்கு அனைத்து தகுதிகளும் திறமைகளும் இருக்கிறது. செயல் திட்டம் இருக்கிறது. தொலைநோக்கு சிந்தனை இருக்கிறது. எத்தனையோ சாதனைகள் செய்திருக்கின்றோம்.
ஆனாலும், மக்கள் நம் மீது இன்னும் கூடுதலாக நம்பிக்கை வைக்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் ஆட்சிக்கு வர முடியும். எல்லாம் நமக்கு இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் கோடான கோடி என் தம்பிகளும் தங்கைகளும் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றார்கள் அதற்கு ஒரு அத்தாட்சி கடந்த மாதம் மாமல்லபுரத்தில் நடந்த மிகப்பெரிய ஒரு மாநாடு" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications