கட்சியில் அன்புமணி ராமதாசுக்கு புரோமோஷன்..? வரும் 16-ம் தேதி கூடுகிறது பாமக சிறப்பு பொதுக்குழு..!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி ராமதாஸுக்கு பதவி உயர்வு கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு வரும் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பாமக தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., இணைய வழியில் நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுக்குழுவில் பங்கேற்பதற்கான இணையதள முகவரியும், கடவுச்சொல்லும் பிறகு தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார் ஜி.கே. மணி எம்.எல்.ஏ.
பொது இடங்களில் புகையிலை பயன்பாடு அதிகம்.. புள்ளி விவரத்துடன்.. மத்திய அமைச்சருக்கு, அன்புமணி கடிதம்
பாமக
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவராக உள்ள அன்புமணி ராமதாசுக்கு, கட்சியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. கட்சியின் நிறுவனராக ராமதாஸும், கட்சியின் தலைவராக ஜி.கே.மணியும் செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி ராமதாஸுக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்பது அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பொதுக்குழு
இந்நிலையில் பாமக வின் சிறப்பு பொதுக்குழு வரும் 16-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இணையதளம் மூலம் காணொலி வடிவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி ராமதாசுக்கு அளிக்கப்பட வேண்டிய புரோமோஷன் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், பாமகவிலிருந்து அண்மையில் 4 ஒன்றியச் செயலாளர்கள் (3 பேர் திமுகவில் இணைந்தனர், ஒருவர் அதிமுகவில் இணைந்தார்) வெளியேறிய நிலையில் அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
நகர்ப்புற
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டதை போல், அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவது பற்றி பொதுக்குழுவில் கருத்துக் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்ட பிரச்சாரம் மக்கள் மத்தியில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது பற்றி பொதுக்குழுவில் பேசப்படும் எனத் தெரிகிறது.
பங்கேற்கவில்லை
இணையதளம் மூலம் காணொலி வாயிலாக நடைபெறும் பாமக சிறப்பு பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் ஜி.கே.மணி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.