மது போதையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து வன்முறை.. கடலூர் அருகே பாமக நிர்வாகி கைது
சென்னை: பாமக வடலூர் நகர துணைத் தலைவர் மதியழகன் என்பவர் மதுபோதையில் பேருந்து கண்ணாடியை உடைத்து வன்முறையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஓட்டேரி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை மர்மநபர்கள் 2 பேர் கத்தியால் உடைத்து தகராறில் ஈடுபடுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை பார்த்ததும், மர்மநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது.
3 இருசக்கர வாகனம், ஒரு கார் ,ஆட்டோ மற்றும் ஒரு மினி வேன் உள்ளிட்ட வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகள் மற்றும் சீட் கவர் உள்ளிட்டவை சேதம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்தபகுதியில் பொருத்திவைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பெரம்பூர் வீரபாண்டியன் பகுதியை சேர்ந்த அர்ஜூன் மற்றும் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரும் வாகனங்களை அடித்து நொறுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரையும் இன்று காலை ஓட்டேரி மேம்பாலம் அருகே வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நேற்று தீபாவளி என்பதால் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மது போதையில் வாகனங்களை அடித்து உடைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார்,அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
இதேபோல, கடலூர் அருகே குடிபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த பா.ம.க. வடலூர் நகர துணைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் ஆபத்தானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். வடலூர் பாமக நகர துணைத் தலைவராகும். இவர், நெய்சர் பேருந்து நிலையம் அருகே வந்த அரசு பேருந்தை குடிபோதையில் வழிமறித்துள்ளார்.
நேற்று மாலை மதுபோதையில் நெய்வேலி டவுன்ஷிப் இல் இருந்து வடலூர் நோக்கி அரசு பேருந்தை வழிமறித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என கூறியதுடன் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.