வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி!
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார். பாமக ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இடம்பெறாத நிலையில், வட தமிழகத்தில் முக்கிய வாக்கு வங்கியாக இருக்கும் வன்னியர் ஓட்டுகளை திமுக கூட்டணி மொத்தமாக இழக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் தவாக-வுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட இடங்களை விட, இந்த முறை கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்தார் வேல்முருகன். குறிப்பாக, வட தமிழகத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க குறைந்தபட்சம் 3 முதல் 5 தொகுதிகள் வரை அவர் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமை 1 சீட்டுக்கு மேல் தரத் தயாராக இல்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். அப்போதே ஒரு எம்.பி சீட் கேட்ட அவருக்கு 2021-ல் ஒரேயொரு எம்.எல்.ஏ சீட்டை மட்டும் கொடுத்தது திமுக. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு எம்.பி சீட் கேட்ட அவருக்கு 2026-ல் பார்த்துக் கொள்ளலாம் என திமுக தரப்பில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இப்போதும் ஒரே ஒரு எம்.எல்.ஏ சீட்டைத் தர முன்வந்திருக்கிறது திமுக. திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்திருப்பதால், இந்த முறையும் 1 சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடும் கொந்தளிப்பில் உள்ளது தவாக. இந்நிலையில் தான் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள தவாக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதிக் கட்சியாக செயல்படவில்லை என்றாலும், வடமாவட்டங்களில் வன்னியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் வேல்முருகன். திமுக கூட்டணியில் இணைந்த இந்த 8 ஆண்டுகளில் வடமாவட்டங்களில் கிளைக் கட்டமைப்பை உறுதி செய்திருக்கிறது தவாக.
வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசு மௌனம் காப்பதாக வேல்முருகன் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தார். பாமக-வுக்கு போட்டியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் வேல்முருகனுக்கு, இந்த இடஒதுக்கீடு விவகாரம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
யாருடைய தயவும் இன்றித் தனித்து நிற்போம் என்ற முடிவின் மூலம், தவாக தங்களது உண்மையான பலத்தை நிரூபிக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ள வேல்முருகன், வட தமிழகம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் தனது கட்சியைக் கொண்டு செல்ல இந்தத் தேர்தலைப் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் இணையக்கூடும் என்ற பேச்சுகள் உலவி வந்த நிலையில், அதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், வன்னியர் சமூகத்தவர் மத்தியில் செல்வாக்கு மிக்க தவாக, திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வட தமிழ்நாட்டில் உள்ள பல சட்டசபை தொகுதிகளில் பெரும்பான்மையாக வன்னியர் சமூக மக்கள் உள்ளனர். இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியையையும் திமுக கூட்டணியில் இழந்துள்ளது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதனால், வன்னியர் சமூக மக்களின் ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications