ஆன்லைன் ரம்மியால் தொடர் தற்கொலைகள்.. தடுப்பதற்கு இதுதான் வழி.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு உயிர்களை பறித்து வருகிறது.
இந்த விளையாட்டினால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து அநியாயமாக தங்கள் உயிர்களை மாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு இன்று ஒருவரது உயிரை பறிபோக செய்துள்ளது.

ஆன்லைன் ரம்மி
சென்னை ஐ.டி கம்பெனியில் பணியாற்றும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான ஆனந்தன் சுமார் ரூ.10 லட்சத்தை ஆன்லைன் ரம்மி விளையாடி அவர் இழந்துள்ளார். இதற்காக ரூ.6 லட்சம் வெளியில் இருந்து கடன் வாங்கி இருக்கிறார். வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி சேர்ந்தால் கடனை கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த அவர் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்தபோது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் எம்.பி
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற மென்பொருள் பொறியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல்கள்.

பயனில்லை
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அப்பாவி இளைஞர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு குறைகள் இல்லாத புதிய சட்டத்தை இயற்றுவது தான் ஒரே தீர்வு. அதை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் பயனில்லை.

அவசர சட்டம்
தமிழ்நாட்டு இளைஞர்களை காக்க உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்து தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆன்லைனில் ரம்மிக்கு ஒரேடியாக முடிவு கட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications