அன்புமணி ராமதாஸ் உடன் முகுந்தன் திடீர் சந்திப்பு.. பாமக தலைவர் யார்? மோதலுக்கு மத்தியில் சமரச பேச்சு
சென்னை: பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் பரசுராமன் அன்புமணி ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அன்புமணி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
பாமக இளைஞரணி தலைவராக தனது சகோதரி மகன் முகுந்தனை நியமிக்க அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கட்சிக்குள் மோதல் வெடித்தது. தற்போது பாமகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை ராமதாஸ் தூக்கிய நிலையில் முகுந்தன் பரசுராமன், அன்புமணி ராமதாஸ் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார். பாமகவின் சிறப்பு பொதுக் குழுவை கூட்டி இந்த முடிவை அறிவித்தார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ். மேலும் பாமகவின் தலைவராக இருந்த ஜிகே மணி, கவுரவுத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.
பாமகவில் தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி முடிவுகள் தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்தன. கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடந்த பொதுக்குழுவில் பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார் ராமதாஸ். முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமித்ததற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
தனது அப்பா ராமதாஸிடம் மேடையிலேயே வாக்குவாதம் செய்தார் அன்புமணி. கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மத்தியில் தனது தொலைபேசி எண்ணை அறிவித்த அன்புமணி ராமதாஸ் தன்னைச் சந்திக்க விரும்புபவர்கள் பனையூர் வந்து சந்திக்கலாம் என கூறிவிட்டு கோபமாக வெளியேறினார். இதையடுத்து நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தினர்.
பின்னர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று சந்தித்த அன்புமணி, சமாதானம் ஆகிவிட்டதாகத் தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் பாமகவுக்குள் மோதல் வெடித்தது. கடந்த வியாழன் அன்று பாமக நிறுவனர் ராமதாஸ், "பாமக தலைவராக நான் பொறுப்பு ஏற்று இருக்கிறேன். நிறுவனரும் நான்தான். அன்புமணி செயல் தலைவராக மட்டுமே இருப்பார். ஜிகே மணி கவுரவ தலைவராக தொடர்வார்" என்றார்.
ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு அன்புமணி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டினர். ராமதாசை சமாதானப்படுத்த குடும்பத்தினர் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையே, பாமக தலைவர் நான் தான் என அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார் அன்புமணி. "கட்சி கொள்கை விதிகளின்படி, பாமக தலைவரை, பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையில், 2022 மே 28ல் சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் வாழ்த்துகளுடனும் தொண்டர்களின் ஆதரவுடனும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.
எனவே, பா.ம.க., தலைவராக தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, அந்த நோக்கத்தை நோக்கி, உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க உறுதி பூண்டிருக்கிறேன். மாமல்லபுரம் மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறேன்.
வரும் சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரை, தொண்டர்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை, ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது, என் பெரும் கடமை. அந்தக் கடமையை, சரியான நேரத்தில் செய்து முடிப்போம். அரசியல் களத்தில் ராமதாஸ் லட்சியங்களை வென்றெடுக்க, தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்." எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையை அடுத்து பனையூரில் உள்ள அன்புமணி வீட்டிற்கு முகுந்தன் பரசுராமன் சென்றார். கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவில் பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கட்சிக்குள் மோதல் வெடித்தது. தற்போது பாமகவின் தலைவர் யார் என்பதில் ராமதாஸ் - அன்புமணி இடையே பனிப்போர் நிலவிவரும் சூழலில் முகுந்தன் பரசுராமன் அன்புமணியின் வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்துள்ளார்.












Click it and Unblock the Notifications