பரபரக்கும் பாமக 2.0 திட்டம்! தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்! அன்புமணி ராமதாஸ் புதிய முயற்சி!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே அது வட தமிழக கட்சி என்ற பிம்பத்தை மாற்றுவதற்கான புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
பாமக 2.0 என்ற பெயரில் புதிய அஜெண்டாகளோடு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரும் அவர், இப்போதே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளுக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டார்.
இதனிடையே கடந்த வாரம் தென்மண்டல நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் ஒன்றையும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடத்தி முடித்துள்ளார் அன்புமணி.

பாமக கட்டமைப்பு
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை விழுப்புரம், தருமபுரி, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், அரியலூர், உள்ளிட்ட வட மாவட்டங்களில் வலிமையான கட்டமைப்போடு செயல்பட்டு வருகிறது. அடிமட்ட அளவில் கிளை வாரியாக இந்த மாவட்டங்களில் பாமகவுக்கு கட்டமைப்பு உள்ளதால் வாக்குவங்கிக்கும் அங்கு எந்தக் குறையும் இல்லை. இதனால் தான் கூட்டணி விவகாரத்தில் பாமகவுக்கு எப்போதுமே சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.

பாமக 2.0 திட்டம்
இந்நிலையில் பாமக 2.0 திட்டம் என்ற பெயரில் கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளுக்கு அடித்தளம் அமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாமக மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பதை தாம் விரும்பவில்லை என்றும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக நாம் வர வேண்டும் எனவும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார்.

தென் மாவட்டங்கள்
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே அது வட தமிழக கட்சி என்ற பிம்பம் இருந்து வரும் நிலையில், அதனை மாற்றுவதற்கான முயற்சியிலும் அன்புமணி இறங்கியிருக்கிறார். அந்த வகையில் கடந்த வாரம் தென்மண்டல நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் ஒன்றை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏற்பாடு செய்து அதில் கலந்துகொண்டு பேசினார். தென் மாவட்டங்களில் நிலவும் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக இனி குரல் கொடுக்கவும் தயாராகிவிட்டார்.

இளைஞர்கள்
இதேபோல் புதிய சிந்தனைகளுடன் மாற்றத்தை எதிர்நோக்கும் இளைஞர்களை பாமகவில் இணைப்பதற்கான செயல்திட்டத்தையும் விரைவில் அவர் செயல்படுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் வயது மூப்பு காரணமாக பெரியளவில் இப்போது பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. இதனால் அவரது இடத்தில் நின்று இப்போது பரபரப்பாக சுழலத் தொடங்கியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications