நீட் தேர்வு.. தமிழகத்திற்கு விலக்கு.. பாஜக கூட்டணியில் உள்ள பாமக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
சென்னை: தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி, 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில் நீட் தேர்வு விலக்கு குறித்து வாக்குறுதி அளித்துள்ளது. நீட் தேர்வு குறித்து பாஜக பாசிட்டிவாக பேசி வரும் நிலையில், பாமக நீட் விலக்கு குறித்து வாக்குறுதி அளித்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
இந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்ட பாஜக, இந்த முறை தனித்து நின்று தனக்கான கூட்டணியை உருவாக்கியுள்ளது.

அதன்படி, பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் இந்த கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான பாமக, இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில்,
கல்வி: கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில், கல்வித் துறையில் புரவலர் என்ற வகையில் மட்டும் மத்திய அரசின் பங்களிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படுவது போன்று உலகத்தரம் வாய்ந்த கல்வியை, முழுக்க முழுக்க அரசின் செலவில் இலவசமாக வழங்க பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளை அமைக்கவும், பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடங்களை நடத்துவதற்கும் தேவையான நிதியில் 50 விழுக்காட்டை மானியமாக வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.
அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யும்படி, மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
தொலைதூரங்களிலும், மலை கிராமங்களிலும் உள்ள பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆசிரியர் குடியிருப்புகளும், போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.
உயர்கல்வி: உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும்.
மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாணவர் ஆணையங்கள் அமைக்கப்படும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு: நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை அறிமுகம் செய்யப்படும்.
சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக டி.ஐ.டி. என்ற பெயரில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியில் 50%ஐ மத்திய அரசு மானியமாக வழங்கும்" என்று கூறியுள்ளது.
இதில் நீட் தேர்வு குறித்து கூறியுள்ள வாக்குறுதிகள் விவாதங்களை கிளப்பியுள்ளன. அதாவது, "மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். பொதுச் சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும். மத்திய அரசின் அனைத்துச் சேவைகளையும் சான்றிதழ்களையும் இணையம் வாயிலாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பாமக தனது தேர்தல் வாக்குறுதியாக கூறியுள்ளது.
நீட் தேர்வு குறித்து பாஜவினர் பாசிட்டிவாக தொடர்ந்து பேசி வருகின்றனர். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "அரசு பள்ளி மாணவர்கள் அதிகமானோர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். நீட் தேர்வினால் தமிழகத்தில் மாணவனும் அவரது தந்தையும் உயிரை மாய்த்துள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
இப்படி இருக்கையில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக, நீட் தேர்வு விலக்கு குறித்து வாக்குறுதி அளித்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications