திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தவர் பாடலாசிரியர் புலமைப்பித்தன்... வைரமுத்து புகழஞ்சலி
சென்னை: திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தவர் மறைந்த கவிஞர் பாடலாசிரியர் புலமைப்பித்தன் என்று கவிப்பேரரசு வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுளார்.
முதுபெரும் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் புலமைப்பித்தன் (வயது 86) எம்.ஜி.ஆர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் காலத்தால் அழியாத பல காவியங்களை பாடல்களாக கொடுத்தவர் கவிஞர் புலமைப்பித்தன். தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்தவர். அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர்.

வயது முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள புகழஞ்சலி:

தமிழ்க் கலைஉலகில்
புலவர் மரபில் வந்த
பாடலாசிரியர் புலமைப்பித்தன்
திரைப்பாட்டுக்குள்
செழுந்தமிழ் செய்தவர்
அவருடைய பல பாடல்கள்
மேற்கோள் காட்டத்தக்கவை
தமிழ் தமிழர் என்ற
இரண்டு அக்கறைகள் கொண்டவர்
அவர் மறைவு
துயரம் தருகிறது
குடும்பத்தார்க்கும்
தமிழன்பர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்
இவ்வாறு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications