லோகேஷ் கனகராஜ் படம் மாதிரி.. டன் கணக்கில் கஞ்சா! “மாஸ்டர் மைண்டுடன்” மொத்தமாக தூக்கிய போலீஸ்
சென்னை: தமிழ்நாட்டில் 358 போதைப் பொருள் கடத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்த காவல்துறை 1,486 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மற்றும் நடப்பு பிப்ரவரி மாதங்களில் போதைப்பொருள் மற்றும் மனமயக்கப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 18 பெண்கள் உட்பட மொத்தம் 358 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 1486 கி.கி. கஞ்சா மற்றும் 2200 டைடால் மாத்திரைகள் உள்ளடக்கிய 1.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் 17 இருசக்கர வாகனங்கள், 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

முக்கிய வழக்காக கடந்த 11.02.2024 அன்று சென்னை மாநகர் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜிபான் பிஸ்வாஸ், (ஆ/வ 30,) பல்ராம் புஜாரி, (ஆ/வ 25) மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சாஷிகுமார், (ஆ/வ 32) ஆகிய மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 101 கி.கி. உலர் கஞ்சா மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 15.012024 அன்று மதுரை, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த ராஜபாண்டி, (ஆ/வ 27, ) செல்வம் @ செல்வராஜ், (ஆ/வ 36) மற்றும் சிவப்பிரகாஷ், (ஆ/வ. 24) ஆகிய மூன்று குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 10 இலட்சம் மதிப்புள்ள 100 கி.கி. உலர் கஞ்சா மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 17 குற்றவாளிகள் பல்வேறு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவில் 22 கிலா கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கு 31.01.2024 அன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,00,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போல் திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவில் 20 கி.கி கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் என்பருக்கு 07.02.2024 அன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,00,000/- அபராதமும் விதிக்கப்பட்டது.
போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சட்ட அமலாக்கம் தவிர, மாணவர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த 53 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் மற்றும் மனமயக்கபோதைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண். 10581 மூலம், வாட்ஸ்அப் எண்.94984 10581 அல்லது மின்னஞ்சல் ஐடி [email protected] மூலமும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகலவல்களை தெரிவிக்கலாம். மதுவிற்பனை தொடர்பான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான புகார் மற்றும் தகவல்களைப் பகிர்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications