சிறுமிகளிடம் பாலியல் மீறல்.. ஆபாச வார்த்தைகள்.. யூடியூப் கேமர் மதனுக்கு செக்.. போலீசில் ஆஜராக கெடு
சென்னை: பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக பேசியதாகவும், யூ டியூப் கேமில் பெண்களிடம் மோசமாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட யூடியூப் கேமர் மதனுக்கு போலீஸ் வலை விரித்துள்ளது. புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீஸ் மதன் ஆஜராக வேண்டும் என்று போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
யூடியூபில் மிகவும் பிரபலமான கேம்மரான மதன் மீதான கடந்த சில நாட்களாக கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. யூடியூபில் பப்ஜி உள்ளிட்ட கேம்களை விளையாடுவதை லைவ் ரிலே செய்து, அதில் பல நுணுக்கங்களை கற்றுத்தருவதாக சேனல் தொடங்கியவர்தான் கேமர் மதன்.
யூ டியூப் சேனலில் பிரபலம் ஆன நிலையில், சேனலில் இவர் மோசமாக பேசுவது, பெண்களை கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று கேமர் மதன் மிக மோசமாக நடந்து இருக்கிறார்.
சேனல்
சேனலில் வீடியோ பார்க்கும் பெண்களை லைவிலேயே மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் பேசி சர்ச்சையானர். அதோடு பள்ளி சிறுமிகளிடமும் இன்ஸ்ட்டா பக்கத்தில் பாலியல் ரீதியாக தவறாக பேசி இருக்கிறார். சில பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் புகார்கள் வைக்கப்பட்டுள்ளன.
புகார்
பாலியல் ரீதியாக இவர் மீது நிறைய புகார்கள் ஆதாரங்களுடன் இணையத்தில் அடுக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் தனது கேம் சேனலுக்கு நிதி திரட்ட வேண்டும் என்று சிறுவர்களிடமும், சிறுமிகளிடம் பணம் வாங்கி மோசடி செய்து இருக்கிறார். யூ டியூபில் இவருக்கு முழுக்க முழுக்க 18 வயதுக்கு கீழான சிறுவர், சிறுமிகள் பின் தொடர்பாளர்களாக இருக்கிறார்.
பின் தொடர்பு
பணம் திரட்டுவதாக ஒரு பக்கம் நிதி மோசடி செய்ததோடு, சிறுமிகளின் பாலியல் ரீதியான புகைப்படங்கள், வீடியோக்களையும் இவர் டெலிகிராமில் விற்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. டெலிகிராமில் காசு வாங்கிக்கொண்டு சிறுமிகளின் வீடியோக்களை இவர் விற்றதாக புகார்கள் அடுக்கப்படுகின்றன. இணையத்தில் கடந்த 4 நாட்களாக இது தொடர்பான புகார்கள் அதிகம் வைக்கப்பட்டு வருகின்றன.
போலீஸ் வலை
டிவிட்டர், பேஸ்புக், கிளப் ஹவுஸ் என்று அனைத்திலும் கேமர் மதன் குறித்து விவாதங்கள் நடந்தது. மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் மாநில குழந்தைகள் நல ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசில் புகார்-நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மாலைக்குள் இவர் போலீசில் ஆஜராக வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.