எங்கே, முடிஞ்சா ஒரு செங்கல்லை வை பார்ப்போம்.. சேலஞ்ச் செய்த பிரேமலதா.. வழக்கு பதிந்த ஓசூர் போலீஸ்
தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
சென்னை: டிராக்டர் ஓட்டிக் கொண்டே வந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்த தேமுதிக பிரேமலதா உள்ளிட்டோர் மீது ஓசூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது... ஆனாலும் நாங்கள் கட்டியே தீருவோம் என்று கர்நாடகா பிடிவாதம் பிடித்து வருகிறது..
மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக அனைத்து கட்சி குழு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியது... அதேசமயம் மேகதாது அணை விவகாரத்தில் தஞ்சாவூரில் தமிழக பாஜகவை சேர்ந்தவர்கள் கர்நாடக பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

போராட்டம்
அந்த வகையில், தேமுதிகவும் நேற்று போராட்டம் நடத்தியது.. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் ராம்நகரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், டிராக்டர் ஓட்டியபடியே கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வந்து சேர்ந்தார்.

ஆர்ப்பாட்டம்
அப்போது பிரேமலதா ஆர்ப்பாட்டத்தின்போது பேசியதாவது: "தமிழகம் ஏற்கெனவே வறண்ட பூமியாகக் காட்சியளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகம் பாலைவனமாகிவிடும். தஞ்சாவூரில் விளைவிக்கப்படும் நெல்தான், இந்தியா முழுவதும் உணவுக்குப் பயன்படுகிறது. தஞ்சாவூருக்குத் தண்ணீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகும்.

பொறுப்பு
தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோர் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறார்.. மாநில எல்லை வரை வந்தவர்கள், கர்நாடகாவுக்கு வரமுடியாதா? நமக்குள் பிரிவினை வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்..

கர்நாடகா
தமிழக மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா, சுபாஷ் சந்திரபோஸாக இருக்க வேண்டுமா என்று கர்நாடகாதான் முடிவு செய்ய வேண்டும். மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம்... நாம் இனத்தால், ரத்தத்தால், மூச்சுக்காற்றால் ஒன்றுதான்... தண்ணீரால் மட்டும் ஏன் பிரிவினை? நமக்குள் பிரிவினை வேண்டாம்... காவிரி நமது அன்னை, அதற்காக எதையும் செய்வோம்... மத்தியில் பாஜக, கர்நாடகாவிலும் பாஜக அரசு ஆளுகிறது. அதனால், மத்திய அரசு கர்நாடகா அரசிடம் பேசி, கர்நாடகா அணை திட்டத்தைக் கைவிட வேண்டும்" என்றார்.

வழக்கு பதிவு
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக அவைத்தலைவர் பார்த்தசாரதி, முன்னாள் எம்எல்ஏக்கள், உள்பட 300க்கும் அதிகமான மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகமாக பங்கேற்றனர்... இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் உட்பட 349 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்... காரணம், ஓசூரில் கொரோனா விதிகளை மீறி போராட்டம் நடத்தியதாக நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications