"மீண்டும் ஒரு புரட்சி"! மதுவிலக்கு கோரி மெரினாவில் போராட்டம்? போலீஸார் பாதுகாப்பு
சென்னை: மதுவிலக்கை உடனே அமல்படுத்தக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் இன்று போராட்டம் நடத்த ஒன்று கூடுமாறு சமூகவலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்ததாக தகவல் பரவியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற பகுதியில் ஒருவரது துக்க நிகழ்ச்சிக்காக வந்தவர்களுக்கு கள்ளச்சாராயம் விநியோகம் செய்யப்பட்டது. இதை குடித்த பலர் வயிற்றுப்போக்கு, ரத்த வாந்தி, கண் பார்வை பறி போனது, நரம்பு தளர்ச்சி, கோமா உள்ளிட்டவைகளால் அவதியடைந்து பலியாகிவிட்டனர்.

இந்த கோர சம்பவத்தில் இதுவரை 54 பேர் பலியாகிவிட்டனர். சில மருத்துவமனைகளில் 10க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
கள்ளச்சாராயம் குடித்துவிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது போல் ஒரு குடும்பத்தில் தாய், தந்தையை இழந்து வாடும் 3 குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும் என்றும் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ 5 ஆயிரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாராயம் குறித்த தேடுதல் வேட்டையில் இதுவரை 8300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கையும் இதுவாகத்தான் இருக்கிறது. டாஸ்மாக் மதுபானத்தை குடித்தவர்களும் பலியாவதால் அவர்களுடைய குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி புரட்சி போராட்டம் வெடித்ததை போல் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை மெரினாவில் போராட்டத்தை இன்று (ஜூன் 22) தொடங்குவோம் என சமூகவலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மெரினாவில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 150 போலீஸார் குவிந்துள்ளனர். மணற் பரப்புகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாராவது போராட்டம் நடத்தினால் அவர்களை கைது செய்யவும் போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications