தரையில் கிடந்தது என்ன? அதிகாலையில் நடந்த.. கூடுவாஞ்சேரி என்கவுன்ட்டர்.. களமிறங்கிய தடயவியல் டீம்
சென்னை: சென்னை கூடுவாஞ்சேரி என்கவுன்ட்டர் தொடர்பாக தற்போது தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்த உள்ளனர். ரவுடிகள் உயிரிழந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
இன்று காலை தாம்பரம் அருகே கூடுவாஞ்சேரியில் 2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். போலீசார் ரோந்து பணியின் போது இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டது.

அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கே பல்வேறு கார்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை, போலீசார் நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த கார் நிற்காமல் செல்ல முயன்றுள்ளது .
இதையடுத்து போலீசார் குறுக்கே சென்று மறைக்க முயன்றுள்ளனர். அவர்கள் மீது மோதாமல் திரும்பிய அந்த கார் பின் காவல்துறையின் வாகனத்தில் மோதி நின்றது. அந்த காரில் இருந்து, கீழே இறங்கிய ரவுடிகள் ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கி உள்ளனர். அவர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் உதவி ஆய்வாளரின் கையில் வெட்டுப்பட்டுள்ளது
உடனே போலீசார் தற்காப்பிற்காக மாறி மாறி சுட்டு உள்ளனர். போலீசார் சுட்டதில் வினோத் மற்றும் ரமேஸ் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
என்ன நடந்தது?: இது தொடர்பாக போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று 01-08-2023 ஆம் தேதி அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அதி வேகமாக வந்த கருப்பு நிற SKODA காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்தது.
போலிஸ் ஜீப் மீது மோதி நின்ற கார் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர். அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது.
தாக்குதல்: இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள். மேற்படி காயம்பட்ட இருவரை பற்றி விசாரிக்க அதில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத், வயது 35. த/பெ. சுப்பிரமணி என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் மற்றொரு நபர் பெயர் ரமேஸ், வயது 32. த/பெ. சுந்தரம் என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, HS.No.18/20) குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேற்படி காயம்பட்ட உதவி ஆய்வாளர் திரு. சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். காயம்பட்ட எதிரிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது எதிரிகள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சோதனை: இந்த நிலையில் சென்னை கூடுவாஞ்சேரி என்கவுன்ட்டர் தொடர்பாக தற்போது தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்த உள்ளனர். ரவுடிகள் உயிரிழந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். என்கவுண்டர் நடத்தது முறையானதா? திட்டமிடப்பட்டதா? ரவுடிகள் தாக்குதல் நடத்தியது எப்படி என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
தரையில் இருக்கும் பொருட்கள் என்னென்ன? அங்கே இருந்த ரத்த சாம்பிள்கள், துப்பாக்கி குண்டு செல்லுகள் ஆகியவற்றை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications