அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த பாலியல் புகார்... 351 பக்க குற்றப்பத்திரிகை
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: திருமண ஆசைகாட்டி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த புகாரின் பேரில் பதிவான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிகையை அடையாறு மகளிர் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை கருவுறச் செய்து ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐ.பி.சி 323 வேண்டுமென்றே காயப்படுத்துதல், 313 பெண்ணிடம் அத்துமீறி செயல்படுதல், 417 நம்பிக்கை மோசடி, 376 ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல், 506(1) கொலை மிரட்டல், 67 a IT act ஆபாசத்தை உள்ளடக்கிய புகைப்படங்களை வெளியிடுதல், பகிர்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் தலைமறைவானார். மாயமான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர். பெங்களூருவில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 7ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இந்தப் புகாரில் ஏற்கனவே மணிகண்டன் மீது 2 வழக்குகள் இருந்த நிலையில், 342, 352 ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்த்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications