நடிகர் வடிவேல், இசையமைப்பாளர் தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம்.. விழா ஏற்பாட்டாளர் தலைமறைவு
நடிகர் வடிவேல் உள்பட 50 பேருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் விழா ஏற்பாட்டாளர் ஹரீஷ் தலைமறைவு
சென்னை: நடிகர் வடிவேல், இசையமைப்பாளர் தேவா உள்பட 50 பேருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் விழா ஏற்பாட்டாளர் ஹரீஷ் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். இந்த விழாவில் சினிமா, சமூகப்பணி, அரசியல், ஜோதிடம், யூடியூப் மீடியா உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
டுவிஸ்ட்.. வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்? அண்ணா பல்கலையில் பகீர்.. நீதிபதி வள்ளிநாயகம் விளக்கம்

தேவா
இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நகைச்சுவை பேச்சாளர் ஈரோடு மகேஷ், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, யூடியூபர்களான கோபி, சுதாகர் உள்ளிட்ட 50 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அது போல் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலுவுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்க அழைக்கப்பட்டது.

வடிவேல் வரவில்லை
ஆனால் அவர் விழா நடைபெறும் இடத்திற்கு நேரடியாக வரவில்லை. இதனால் அவரை நேரில் சந்தித்த விழா குழுவினர் அவருக்கு டாக்டர் பட்டத்தை அளித்தனர். அப்போது வடிவேல் எம்ஜிஆர் பாடலை பாடி அசத்தினார். இந்த நிலையில்தான் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட டாக்டர் பட்டங்கள் போலியானவை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடந்திருப்பதாகவும் தெரியவந்தது.

துணைவேந்தர் விளக்கம்
இந்த சம்பவம் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், நடிகர் வடிவேல் உள்ளிட்டோருக்கு அளித்த டாக்டர் பட்டத்திற்கும் எங்கள் பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. விழா ஏற்பாட்டாளர்கள் ஏதோ விருது வழங்கும் நிகழ்ச்சி என்று கூறி தான் அனுமதி கேட்டனர். ஆனால் முதலில் நாங்கள் தரவில்லை.

வள்ளிநாயகம்
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தின் கையெழுத்துடன் வந்து கேட்டனர். அவரது செல்வாக்கையும் அவருடைய நற்பெயரையும் கருத்தில் கொண்டு நாங்கள் அனுமதி கொடுத்தோம். அவர் மிகவும் நல்லவர், அவருக்கு சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்துடையவர். ஆனால் இப்போதுதான் எங்களுக்கு தெரிகிறது, வள்ளி நாயகத்தின் கையெழுத்தை இவர்கள் போலியாக போட்டு எங்களிடம் அனுமதி வாங்கியிருக்கலாம்.

கவுரவ டாக்டர் பட்டம்
பொதுவாக கவுரவ டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகங்கள்தான் கொடுக்கும். தனியார் நிறுவனம் கொடுக்கக் கூடாது. இதுவே ஒரு குற்றச்செயல்தான். மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் போலியாக டாக்டர் பட்டம் வழங்க ஏதுவாக அந்த தேதியையும் பிற்பகல் 3 மணி நேரத்தையும் விழா ஏற்பாட்டாளர்கள் சாமர்த்தியமாக தேர்வு செய்துள்ளார்கள்.

விருது வழங்கும் விழா
ஞாயிற்றுக்கிழமை வேளையில் பிற்பகல் 3 மணிக்கு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு விருது வழங்கும் விழா என கூறிவிட்டு டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளனர். மேலும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்படும் என்றார். இதையடுத்து பல்கலைக்கழகம் சார்பில் போலீஸ் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹரீஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்த அவரை அணுகிய போது அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. மேலும் அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கூறுகையில் நான் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் நடந்தது தவறு என்றால் அது தவறுதான் என்றார்.












Click it and Unblock the Notifications