சென்னையில் இரட்டை கொலை.. உடலை பண்ணை வீட்டில் புதைத்த டிரைவர் கைது.. சில மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னை மயிலாப்பூரில் வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வெறும் சில மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர்.
Recommended Video
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55).
கடந்த மாதம் மார்ச் இவர்கள் இருவரும் அமெரிக்காவிலுள்ள மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காகச் சென்றுள்ளனர்,

தொடர்பு கொள்ள முடியவில்லை
இவர்கள் இருவரும் இன்று (மே 7) அதிகாலை 03.30 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து இவர்களது ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் இவர்களை அழைத்து வந்து வீட்டில் இறக்கியுள்ளார். இதையடுத்து அமெரிக்காவில் இருந்து அவரது மகள் சுனந்தா, தனது பெற்றோரைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

பூட்டி கிடந்த வீடு
அப்போது தனது தாய், தந்தை இருவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகிருந்ததால், சந்தேகம் அடைந்த சுனந்தா, இந்திரா நகரை சேர்ந்த தனது உறவினரான திவ்யாவை தொடர்புகொண்டுள்ளார். இதையடுத்து திவ்யா தனது கணவர் ரமேஷ்சுடன் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டிற்கு மதியம் 12.30 மணி அளவில் சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்துள்ளது.

போலீஸ் விசாரணை
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், அக்கம் பக்கம் இருப்பவர்களின் உதவியுடன் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் இல்லாத காரணத்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல், உதவி ஆணையர் கவுதமன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

டிரைவர் கைது
முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், மாலை சுமார் 6.30 மணியளவில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடி அருகே காரில் சென்று கொண்டு இருந்த கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பரைப் பிடித்துள்ளனர். டிரைவர் கிருஷ்ணாவிடம் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிலேயே கொலை செய்து, கிழக்கு கடற்கரைச் சாலை, நெமிலிசேரி கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் செயல்பட்டு வரும் இடத்திற்கு எதிரே உள்ள ஸ்ரீகாந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்ததும் தெரிய வந்தது.

பணம், நகை கொள்ளை
இருவரையும் கொலை செய்து ஈசிஆர் பண்ணைவீட்டில் புதைத்து விட்டு, இருவரும் பீரோவில் இருந்த சுமார் ரூபாய் 20 லட்சம் பணம் , நகை ஆகியவற்றைக் கொள்ளை அடித்து விட்டுச் சென்றுள்ளதும் தெரியவந்தது. கொலையாளி கிருஷ்ணா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார். இருவரின் சடலங்களும் கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications