“நேற்று நடந்த நிகழ்வில் நெகிழ்ந்து போனது நெஞ்சு”.. முதல்வர் ஸ்டாலினை வியந்து பாராட்டிய வைரமுத்து!
சென்னை: மறைந்த ஈரோடு தமிழன்பன் இறுதிச் சடங்கில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து கவிஞர் வைரமுத்து, முதல்வர் ஸ்டாலினை நெகிழ்ந்துபோய் பாராட்டியுள்ளார்.
மூத்த தமிழறிஞரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞருமான ஈரோடு தமிழன்பன் மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

மறைந்த ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களும், முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு சென்னை அரும்பாக்கம் மின் மயானத்தில் நேற்று நடைபெற்றது.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மறியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் தனது இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர். அவரின் தமிழ் தெண்டினை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
அதன்படி, அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் காவல்துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கவிஞருக்கு வழங்கப்பட்ட காவல்துறை மரியாதை, இலக்கியவாதிகளை நெகிழ வைத்துள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, இதனைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
"நேற்று நடந்த நிகழ்வில்
நெகிழ்ந்து போனது நெஞ்சு
ஈரோடு தமிழன்பனின்
இறுதிச் சடங்கில் வழங்கப்பட்ட
காவல்துறை மரியாதை கண்டு
கலங்கி அடங்கியது கண்
பத்மஶ்ரீ இல்லை;
பல்கலைக்கழகத்
துணைவேந்தர் இல்லை;
அரசாட்சியின்
அதிகாரத்தில் இருந்ததில்லை
ஆனாலும்
தமிழோடு வாழ்ந்த
ஒரு புலவனுக்கு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தந்த மரியாதை
இலக்கிய உலகத்தின்
ஆறாத கண்ணீருக்கு
ஆறுதல் ஆயிற்று
அந்த நெகிழ்ச்சி அடங்குவதற்குள்
அவரோடு பேச ஆசைப்பட்டேன்
பேசினேன்:
"இலக்கியவாதிகளின் சார்பில்
நன்றி என்றேன்;
ஒரு கவிஞனை
கர்வத்தோடும் கௌரவத்தோடும்
அனுப்பி வைத்தீர்கள்" என்றேன்
அவரும் நெகிழ்ந்து போனார்.
முரசு கட்டிலில்
உறங்கிய புலவனுக்கு
வெண்சாமரம் வீசிய
வேந்தனின் மரபும்,
தமிழின் வாழ்நாள்
பெருகட்டும் என்று
தமிழ்க் கவிக்குக் கனிகொடுத்த
அரசனின் கனிவும்,
கவிஞர்களுக்கு உயரம்சேர்த்த
கலைஞரின் பரிவும்
தளபதி ஆட்சியில் தொடர்வதுகண்டு
தமிழ் படித்த கூட்டம்
பெருமிதம் பெறுகிறது
அவ்வை நடராசனுக்கு
அரசு மரியாதை
நான் கேட்டேன்; வழங்கினார்
ஈரோடு தமிழன்பனுக்குக்
கேட்கவில்லை;
அவரே வழங்கியிருக்கிறார்
தொடரட்டும்
மாண்புகளும் மரபுகளும்
கவிஞர்களின் எழுத்துக்கு கலைஞர் காலம் தொட்டே வழங்கப்படும் இத்தகைய மரியாதைகள் சிறந்த ஆட்சியின் மாண்பை காட்டுகின்றன..
கவிஞர் மரிக்கலாம்; அவரின் எழுத்துகள் மரிப்பதில்லை அந்த எழுத்துகள்
இன்னும் பல
நூற்றாண்டு
வாசிக்கப்படும்
முதல்வருக்கு அன்பும்; நன்றியும்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications