மாமல்லபுரத்தில் பாமக மாநாடு.. இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.. கட்டுப்பாடு விதித்த போலீஸ்!
செங்கல்பட்டு: பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக நடத்தப்படும் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்க காவல்துறை தரப்பில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பாமக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவுள்ளனர். இதனால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக 7,500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏனென்றால் 10 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த மாநாட்டில் ஏராளமான பிரச்சனைகள் எழுந்தன. நினைவு சின்னங்கள் மீது ஏறுவது, விசிக கொடியை வெட்டியது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, திட்டமிட்டபடி மாநாட்டை முடிக்காதது என்று ஏராளமான சம்பவங்கள் அரங்கேறின.
இதனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்போது சட்டசபையிலேயே பாமகவுக்கு வார்னிங் கொடுத்தார். இதனால் இம்முறை எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாமக மாநாட்டிற்கு காவல்துறை தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 1.பாமக மாநாட்டுக்கு வருபவர்கள் வாகனங்களுக்கான பாஸ் பெற்ற மாநாட்டுக்கு வர வேண்டும். பாஸ் இல்லாதவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அனுமதி இல்லை.
2. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ள வழித்தடங்களில் மட்டுமே பயணிக்க வேண்டும்.
3. கடலூர், விழுப்புரம், நாகை மற்றும் மயிலாடுதுறை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள், ஈசிஆர் வழியாக மாநாட்டுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜிஎஸ்டி சாலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4. மாநாட்டிற்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதோ, பொது இடங்களில் மது அருந்துவதோ கூடாது.
5. கடல் நீரில் விபத்துகளை தவிர்க்கவும், மாநாட்டுக்கு வருவோர் அருகில் உள்ள கடற்கரைக்கு செல்லவும் அனுமதி கிடையாது.
6. பொதுமக்கள் ஈசிஆர் சாலையில் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
7. பாமக மாநாட்டிற்கு வருவோர் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பார்க்கிங் செய்ய வேண்டும்.
8. இரு சக்கர வாகனங்களில் மாநாட்டுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. அதேபோல் பொதுமக்கள் மாமல்லபுரம் உள்ளிட்ட ஈசிஆர் பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications