வெளியே வராதீங்க.. கைக்கூப்பி கும்பிட்டு கேட்ட இன்ஸ்பெக்டர்! காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட இளைஞர்
சென்னை: சென்னை ஸ்பென்சர் சிக்னலில் வாகன ஓட்டிகளிடம் இரு கைகளை கும்பிட்டு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கொரோனா பாதிப்பில் இந்தியா 3ஆவது நிலையை அடையும் என்பதால் அது பரவலைத் தடுக்க இந்தியா கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் லாக் டவுன் நிலை அறிவிக்கப்பட்டது.

மத்திய - மாநில அரசுகள்
இதையடுத்து மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. எனினும் பெரும்பாலானோர் இதை மதிக்காமல் சாலைகளில் தேவையின்றி சுற்றித் திரிவதையே காண முடிகிறது. மொத்தமாக லாக் அவுடன் ஆன நகரங்கள் பிஸியாக, போக்குவரத்து நெரிசல் காலங்களில் பார்த்து பழகியதால் தற்போது போக்குவரத்து இயங்காத நகரங்கள் எப்படி இருக்கின்றன என்பதை பார்க்கவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

144 உத்தரவு
இந்த நிலையில் தமிழகத்தில் மதுரையை சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 உத்தரவு போடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதி
அது போல் மக்களும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. எனினும் இந்தியா முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் வாகன போக்குவரத்து காணப்பட்டது. அவர்களை போலீஸார் விசாரித்து உகந்த காரணம் இருந்தால் மட்டுமே அவர்களை அனுமதித்தனர். இல்லாவிட்டால் எச்சரிக்கை விடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

நலன்
ஆனால் சென்னை ஸ்பென்சர் சிக்னல் அருகே வாகன ஓட்டிகள் ஏராளமானோர் வந்ததை பார்த்த காவல் ஆய்வாளர் ரஷீத், ஒவ்வொரு வாகன ஓட்டிகளிடமும் கையெடுத்து கும்பிட்டு வெளியே வராதீர்கள். உங்கள் நலனுக்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம். எனவே தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார்.

வீடியோ
அப்போது அங்கிருந்த வாகன ஓட்டி ஒருவர் அந்த போலீஸ்காரரின் கால்களில் விழுந்தார். அப்போது கைகொடுத்த அந்த நபரை போலீஸார் தடுத்து கை கூப்பி வணக்கம் தெரிவித்து அனுப்பினார். வட மாநிலங்களில் போலீஸார் வாகன ஓட்டிகளுக்கு தோப்புக் கரணம் போடுவது, தடியடி நடத்துவது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நிலையில் இந்த போலீஸார் நம் நலனுக்காக கைகூப்பி வணங்கி கேட்கும் வீடியோ வைரலாகிறது.












Click it and Unblock the Notifications