ரயில் தண்டவாளத்தில் இணைப்பு கம்பிகள் அகற்றம்! சென்னை அருகே மர்ம நபர்கள் சதி செயல்!
சென்னை: வட மாநிலங்களில் ரயில்களை கவிழ்க்க சதி செயல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதே பாணியில் சென்னை அருகேயும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதனையடுத்து ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகின் மிகப் பழமையான ரயில் சேவைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, மிகப்பெரிய நெட்வொர்க்கையும் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக நடக்கும் ரயில் விபத்துகள் இந்தியன் ரயில்வேக்கு ஒரு களங்கமாக மாறியிருக்கிறது. ரயில் பயணங்கள் பாதுகாப்பானது என்று நம்பியிருந்த காலம் போய், ரயில் பயணத்தில்தான் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது என்கிற பேச்சு தற்போது அடிப்பட தொடங்கியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் பலியாகியிருந்த சம்பவம், ஆந்திராவில் பலாசா பயணிகள் ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்தது, ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது, இது தவிர ஆங்காங்கே சரக்கு ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில் ரயில்களை கவிழ்க்க சதி செயல்கள் அரங்கேறி வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் ரயில் தண்டவாளத்தில் 70 கிலோ சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க முயன்றதாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து, பிலாஸ்பூர் மற்றும் ருத்ராபூருக்கு இடையே 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை தண்டவாளத்தில் வைத்து பயணிகள் ரயிலை கவிழ்க்க முயன்றதாக செய்திகள் வெளியாகின.
வடமாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. மூன்று நாட்களுக்கு முன்னர், மதுரை ராமநாதபுரம் ரயில் பாதையில் 120 மீட்டர் நீளத்திற்கு, ஸ்லீப்பர் கட்டைகளில் இருந்த இரும்பு கிளிப்புகள் கழற்றப்பட்டிருக்கின்றன. இது குறித்து பணியில் இருந்த கீமேன் உரிய நேரத்தில் எச்சரித்ததால் அந்த வழியாக வந்த பயணிகள் ரயில், மெதுவாக இயக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது.
அதேபோல சென்னை அருகே பொன்னேரி பகுதியில், திருவள்ளூர்-கும்மிடிப்பூண்டி ரயில் பாதையில் இணைப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டிருக்கிறது. இன்று காலை ரயில்களுக்கு சிக்னல் கொடுக்க முயன்றபோது சிக்னல் விழாமல் இருந்திருக்கிறது. இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்ட சோதனையில் மேற்குறிப்பிட்ட விஷயம் தெரிய வந்திருக்கிறது.
சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டு தண்டவாளத்திலேயே போடப்பட்டிருக்கிறது. எனவே இதனை செய்தது யார்? இந்த ரயில் பாதை வழியாக டெல்லிக்கு செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. எனவே, ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டிருக்கிறதா? என்கிற கோணத்தில் ரயில்வே போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், வடமாநிலங்களை போலவே தமிழ்நாட்டிலும் ரயில்களை கவிழ்க்க சதி நடத்தப்படுகிறதா? என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ரயில்வே ஊழியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை தேவையை விட குறைவாக இருக்கிறது. இதனால் பராமரிப்பு பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதை மறைக்க ரயில் கவிழ்ப்பு சதி என்கிற கதைகள் உருவாக்கப்படுகிறதா? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications