தாம்பரம் ஏரியா முழுக்க பிரபல ரவுடி சீசிங் ராஜா படத்துடன் போஸ்டர்.. வலைவீசி தேடும் போலீஸ்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சீசிங் ராஜா மீது போலீசார் சந்தேகித்து வரும் நிலையில், செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சீசிங் ராஜாவை போஸ்டர் ஒட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா மீது சந்தேகம் வர, காவல்துறையினர் அவரை கைது செய்ய திட்டமிட்டனர். ஆனால், அதற்குள் அவர் தப்பிச் சென்று தலைமறைவானார்.

ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சீசிங் ராஜா, தனக்கென தனிக் கூலிப்படை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். சென்னையில் மட்டுமின்றி ஆந்திராவில் அவர் மீது கொலை வழக்குகள் இருக்கின்றன. இதற்காக பல முறை சிறை சென்றுள்ளார். 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல ரௌடிகள் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், சீசிங் ராஜாவையும் போலீசார் குறி வைத்தனர். சீசிங் ராஜா தப்பிய நிலையில், சீசிங் ராஜாவின் கூட்டாளியான சஜித் தனிப்படை போலீசாரால் சில வாரங்க்ளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சீசிங் ராஜா புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டி அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கில் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு சுவரொட்டி தாம்பரம் மாநகர காவல் சார்பில் சேலையூர், தாம்பரம் உட்பட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், "பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், இந்த அறிவிப்பில் உள்ள புகைப்படத்தில் காணப்படும் கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற சீசிங் ராஜா (49), என்பவர் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கின் குற்றவாளி ஆவார்.
அந்த வழக்கில் முறைப்படி அழைப்பாணை வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். நீதிமன்றத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கில் 2024 ஆகஸ்ட் 20-ம் தேதி ராஜா என்கிற சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் சேலையூர் காவல் ஆய்வாளர் 98401 25656, காவல் ஆய்வாளர் அலுவலகம் 94981 00157 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும், ரவுடி சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு சுவரொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications