ரூ 6.47 கோடியில் காவல் துறை அருங்காட்சியகம்.. சிறப்புகள் என்ன?.. பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?
சென்னை: சென்னை எழும்பூர் பழைய காவல் துறை ஆணையர் அலுவலகம் ரூ 6.47 கோடி மதிப்பீட்டில் காவல் துறை அருங்காட்சியகமாக மாறி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழும்பூரில் உள்ள பாரம்பரியமிக்க பழைய காவல் ஆணையரக கட்டடம் 6 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியமாக மாற்றி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டம், எழும்பூரில் பாரம்பரியமிக்க பழைய காவல் ஆணையரக கட்டடமானது, தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் தரைதளத்தில் காவல் துறையில் பயன்படுத்த வாகனங்கள், காவல் துறையால் மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளை கண்டெடுக்க உதவும் கருவிகள், மாதிரி சிறைச்சாலை ஆகியவையும் முதல் தளத்தில் அன்று முதல் இன்று வரை பயன்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகள் , வாள்கள், தோட்டாக்கள் ஆகியவையும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல் துறையில் சிறப்பாக பணி செய்த காவலர்கள் முதல் உயரதிகாரிகள் வரை வழங்கப்பட்டு வரும் மாதிரி பதக்கங்களும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல் துறை தொடர்பான அக்காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேய காலத்து காவல் துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல் துறையின் தொடக்க கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய் படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தித் தொகுப்புகள், காவல் ஆணையர் அலுவலக அறையில் உள்ள அரிய பழம்பொருட்கள், அணிவகுப்பு சின்னங்கள், கம்பியில்லா தொலைத்தொடர்பு கருவிகள், காவல் துறை சேவை புத்தகங்கள், கலைப்பொருட்கள் ஆகியவையும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் கூடுதல் வசதிகளாக கண்காணிப்பு கேமரா, தீ தடுப்பு சாதனங்கள், குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு வசதி, சிற்றுண்டியகம், நுழைவுச் சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவியர்களிடம் தமிழ்நாடு முதல்வர் கலந்துரையாடி இனிப்புகளை வழங்கினார்.
இந்த அருங்காட்சியகத்தை காண வரும் அரசுப் பள்ளி மாணாக்கர்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் 30- ஆம் தேதி வரை எவ்வித கட்டணமும் இன்றி அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அனுமதி கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications