தோட்டா தெறிக்குது.. துப்பாக்கி சுடும் பயிற்சி! ரௌடிகள் அட்டகாசத்தை ஒழிக்க ஆக்ஷனில் இறங்கிய போலீசார்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ முதல் டிஎஸ்பி வரை காவல் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. போலீசார் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று ஏடிஜிபி அறிவுறுத்தி இருந்த நிலையில், எஸ்.ஐ காவல்துறை அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறி ஆகியுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். உள்துறை செயலாளராக இருந்த அமுதா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவி ஏற்றவுடன் டேவிட்சன் தேவாசீர்வாதம் ரவுடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தி வருகிறார். அந்த வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐஜிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதில் ரவுடிகளின் வழக்கை கிடப்பில் போடாமல் தலைமுறைவாக உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அப்படி மீறி கிடப்பில் போட்டால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் ரவுடிகளுடன் தொடர்பில் இருக்கும் காவல் துறையினரை கண்டுபிடித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், காவல்துறை உயர் அதிகாரிகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது. 2021ல், அப்போதைய டிஜிபி சைலேந்திர பாபு ரோந்துப்பணி செல்லும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேல் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் கண்டிப்பாக கைத்துப்பாக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவானது தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் இதுகுறித்து உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. எஸ்.ஐ முதல் அதற்கு மேற்பட்ட அனைத்து அதிகாரிகளும் துப்பாக்கி வைத்திருப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் எஸ்ஐ-க்கள், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்களுக்கு கைத்துப்பாக்கி கையாளும் பயிற்சியுடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என ஏடிஜிபி அறிவுறுத்தியிருந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படு வருகிறது.
துப்பாக்கியில் உள்ள நுணுக்கமான விஷயங்கள் என்னென்ன, எப்படி சரியாகப் பயன்படுத்துவது, இலக்கை குறிவைப்பது எப்படி, சரியாக சுடுவது எப்படி, கைத்துப்பாக்கியை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications