ஜேசிபியால் விளை நிலங்கள் அழிப்பு.. என்எல்சியை கண்டித்து போராட்டம் நடத்த சீமானுக்கு அனுமதி மறுப்பு!
சென்னை: விளை நிலத்தில் என்எல்சியின் விரிவாக்கப் பணிகளை கண்டித்து கடலூரில் போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் நடைபெறுகிறது. இங்கு அறுவடைக்கு தயாராக உள்ள விளை நிலங்களை புல்டோசர் மூலம் பள்ளம் தோண்டி அழித்ததாக என்எல்சி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் பணிகள், கான்கிரீட் அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. விளை நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது.
அப்போது என்எல்சி நுழைவுவாயில் முன்பு தனது தொண்டர்களுடன் நுழைய முற்பட்ட அன்புமணி ராமதாஸை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவுக்கு இடையே அன்புமணி ராமதாஸை கைது செய்ய காவல் துறை வாகனம் வரவழைக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள் காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீஸார் அவர்களை விரட்டினர். பின்னர் அன்புமணி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். எனினும் அவரை கைது செய்யக் கூடாது என வாகனம் முன்பு அமர்ந்து போலீஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் எம்எல்ஏ அருண்மொழிதேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் என்எல்சி விரிவாக்க பணிகளை கண்டித்து நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் வரும் 5 ஆம் தேதி போராட்டம் நடத்த கட்சியினர் முடிவு செய்தனர்.

அதன்படி கடலூர் மாவட்ட எஸ்பியிடம் நாம் தமிழர் கட்சியினர் அனுமதி கேட்டு மனு அளித்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாமக நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications