வான்டடாய் மாட்டிய மகாவிஷ்ணு.. ஏர்போர்ட்டில் வசமாக தூக்கிய போலீஸ்.. பாரதிய நியாய சன்ஹிதாவில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பள்ளியில் மாணவர்களிடையே பிற்போக்குத்தனமாக பேசிய ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய போது சைதாப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார்.

mahavishnu police crime

அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களை அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.. மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவர் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.

இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேசமாகக் கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதற்கிடையே மகாவிஷ்ணு தலைமறைவாகி விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் அவர் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன் என நேற்று வீடியோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய பேச்சாளர் மகாவிஷ்ணு, சனிக்கிழமை அதாவது இன்று மதியம் 1.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து தார்மீக அடிப்படையில் காவல்துறை மீது உள்ள நம்பிக்கை அடிப்படையிலும் நேரில் விளக்கம் அளிப்பேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் சொன்னது போலவே மதியம் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் அவரை வீடியோ எடுப்பதற்காக ஏராளமான ஊடகத்தினர் காத்திருந்தனர். அதே நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் விமானத்தில் இருந்து இறங்கிய மகாவிஷ்ணுவை கைது செய்தனர். மேலும் வழக்கமாக பயணிகள் வரும் வழியில் வராமல் வேறு வழியாக மகாவிஷ்ணுவை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து விமான நிலையத்தில் அழைத்துச் செல்லப்பட்ட மகாவிஷ்ணுவை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாவிஷ்ணு மீது ஐந்து பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 192, 196 (1) ஏ, 352, 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் கீழ் அதாவது 92 ஏ பிரிவின் கீழும் மகாவிஷ்ணு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்படி கலவரத்தை தூண்டுதல், இரு குழுக்கள் இடையே மோதலை தூண்டுதல், குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் இழிவுபடுத்துதல், தவறான தகவலை பரப்புதல், மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்கு பிறகு விரைவில் மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+