அடியில் விட்ட போலீஸ்.. சென்னையில் விஜயகாந்த் ரசிகர்- தொண்டர்கள் மீது தடியடி.. பரபரப்பு
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தொடங்க உள்ள நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. விஜயகாந்த் அடக்கம் செய்யும் இடத்திற்கு செல்ல அனுமதி கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர்.
தமிழ் திரையுலகம் ஏராளமான அரசியல் தலைவர்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜயகாந்த் தனிச்சிறப்பு மிக்கவர். திரைப்படங்களில் பேசும் வசனங்களை அவர் மக்கள் மத்தியிலும் பேசியதே இந்த சிறப்புக்கு காரணம். இது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்படித்தான் அவர் தேமுதிக எனும் கட்சியை உருவாக்கினார். கட்சியை தொடங்கிய ஒரே ஆண்டில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலும் நுழைந்தார் அவர்.

சிறந்த எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். இவருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட மோதல் போக்கு, அதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சரிவு, திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 2016ல் மக்கள் நல கூட்டணியில் நின்று தேர்தலில் தோல்வியுள்ளது என அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒரு கட்டத்தில் அவர் முற்றிலுமாக வெளியேறினார். அரசியல் தோல்வி ஒருபுறம் எனில், உடலும் ஒத்துழைக்காமல் இழுக்கடித்தது.
வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று பார்த்தார். பெரிய அளவில் பலன் இல்லை. அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த் அதில் இருந்து மீண்டார். அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார் விஜயகாந்த்.
கடந்த மாதம் 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல் நலம் குறித்து சலசலப்பு எழுந்தது. ஆனால் அதையெல்லாம் முறியடித்து மீண்டு வந்தது, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களுக்கு உற்சாகமளித்தார். இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று சொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து நெகட்டிவ்வான அறிக்கை வெளியானது. அதாவது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அதிலிருந்து அவரை மீட்க மருத்துவர்கள் போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துவிட்டதாக அறிக்கை வெளியானது. இதைகேட்டு தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் கதறி அழுதனர்.
விஜயகாந்த்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான நடிகர்கள், அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று அவரது இறுதி ஊர்வலம் நடக்கிறது. இதனால் கோயம்பேட்டில் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஆனால் இதில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. உறவினர்கள், முக்கிய நபர்கள் என 200 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஆவேசமடைந்த தொண்டர்களும், ரசிகர்களும் இறுதி சடங்கிற்கு தங்களையும் அனுமதிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.
எனவே கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர். இறுதி சடங்கிற்கு அனுமதி கேட்டு தொண்டர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications