டெல்லியில் தீர்ப்பு.. அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிக்கப்பட்ட போலீசார்.. ஜூலை 11 வன்முறை எதிரொலி!
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பு அளிக்க உள்ளதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்தாண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தில் கடுமையாக மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதில் பல லட்சக்கணக்கான மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பின்னர், கோர்ட் உத்தரவு மூலம் அலுவலக சாவி ஈபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதிமுக மோதல் உச்சகட்டம்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து, ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது.

பெரிய எதிர்பார்ப்பு
இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் இறுதிக்கட்டமாக ஜனவரி 11ஆம் தேதி விசாரித்து முடித்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பு அதிமுகவினர் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீர்வு கிடைக்கும்
சமீபத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான முடிவு கிடைத்தது. பின்னர் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்பேரில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

பலத்த பாதுகாப்பு
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றபோது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற நிலையில், அங்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பெரும் வன்முறை ஏற்பட்டது. அதிமுக தலைமை அலுவலகம் அடித்து சூறையாடப்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications